மார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
பொருள்:
கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே!
நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
திருவெம்பாவை பாடல் - 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.
பொருள்:
'செந்தழல் நிறத்தவனே! மேனியெங்கும் வெண்மையான திருநீறு பூசிய செல்வனே! அழகுநிரம்பிய பொய்கையில் முகேரென்று பாய்ந்து, கைகளால் துழாவித் துழாவிக் குளிக்கிறோம். வழிவழியாக நின் அடியவரான நாங்கள் உனது திருப்பாதங்களைப் போற்றிப் பாடி நல்ல வாழ்வு எய்தினோம்.
'சிறிய இடையைக் கொண்டவரும், தமது பெரிய கண்களிலே அஞ்சனம் இட்டிருப்பவருமான உமையம்மையின் கணவனே! தலைவா! அடியாருக்கு அருளைத் தந்து முக்தியளிக்கும் உன் விளையாட்டுக்கு ஆட்படும் பொருட்டு அவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அவற்றையெல்லாம் நாங்கள் செய்துவிட்டோம். பிறப்பு-இறப்புச் சுழலில் சிக்கி நாங்கள் நலிந்துவிடாமல் காப்பாயாக.'












Click it and Unblock the Notifications