இந்திய சுதந்திர தின ஸ்பெஷல்: துபாயில் அழகுத் தமிழில் கவிபாடிய தமிழர்கள்
துபாய்: துபாயில் தமிழ்த்தேர் நண்பர்களின் இலக்கியச் சந்திப்பு மற்றும் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 இன்று இந்தியாவின் 68 ஆவது சுதந்திரத் திருநாளில் காலை 10.00 மணி அளவில் துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
ஈ.டி.ஏ மெல்கோவின் முன்னாள் பொது மேலாளர் திரு. ஹசன் அஹமது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி ஆனிஷா பாடினார். வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர்- நண்பர்கள் ஜியாவுதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லா, கவிஞர் தஞ்சாவூரான், கவிஞர் ஆதிபழனி, திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ் பானு, கவிதாயினி ஜெயா பழனி, செல்வி ஆனிஷா ஆகியோருடன் முக்கிய விருந்தினராக திரு ஹசன் அஹமது குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கவிஞர் காவிரிமைந்தன் தொகுப்புரை வழங்கிட, திருமதி நர்கீஸ் பானு வரவேற்புரை நல்கினார். சிறப்பு விருந்தினர் ஹசன் அஹமது அவர்களுக்கு தமிழ்தேர் சார்பில் ஹெல்த் கணேசன் பொன்னாடை அணிவித்தார். திரு.ரமணி மற்றும் ஆதிபழனி ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர்.
செல்வி ஆனிஷா நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் விடுதலைப் போராட்ட வீரர்கள் வாஞ்சி நாதன், வ.உ.சி. மற்றும் பலரின் வரலாறுகளை தியாகங்களை குறிப்புகளாகத் தந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சிறப்புரையாற்றிய ஹசன் அஹமது தன் தெள்ளியதமிழால் நெஞ்சை அள்ளினார். பிரத்யேகமாக தானே தயாரித்த பட்டியல் வழியாக விடுதலைக்காக அரும்பாடுபட்ட முன்னணியினரை நினைவூட்டினார். தனக்குள் இருந்த கவிதை ஆர்வத்தை தனது பேச்சில் நிறைத்து வழங்கியபோது சபையில் கரவொலி குவிந்தது. ஹெல்த் கணேசன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.
முதுவை ஹிதாயத்துல்லா தமிழர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கடந்த பல மாதங்களாக இருக்கும் விஷயத்தைப் பற்றியும் அவருக்கு ஈமான் கலாச்சார மையம் மூலம் உதவிசெய்து தமிழக அரசு உதவியோடு அவரை தமிழகத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்வதுபற்றி விரிவாக எடுத்துரைத்ததுடன் இதுபோல் உதவிபெற வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களை தமக்கு தரும்படி கேட்டுக் கொண்டார்.

விடுதலை என்னும் தலைப்பில் கவிதைகளை திருமதி நர்கீஸ் பானு, கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன், கவிஞர் யமுனாலிங்கம், கவிஞர் தஞ்சாவூரான், கவிஞர் குறிஞ்சிதாசன், கவிஞர் சந்திரசேகர் வழங்கினர்.
விடுதலை பற்றி பா.கலைச்செல்வன், ராம்விக்டர், எஸ்.ரபீஃக், ஹெச்.இப்னு சிக்கந்தர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

விடுதலை சிறப்பிதழ் முதல் பிரதியை திரு. ஹசன் அஹமது வெளியிட கலைச்செல்வன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை ஜஹாங்கீர் வெளியிட ஆயிஷா மர்யம் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை ஜியாவுதீன் வெளியிட வரதராஜ் குமார் பெற்றார். திரு.ரததினவேல், திரு.கணேசன் மணி, திரு.சங்கர நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் நண்பர்கள் குடும்ப சந்திப்பாக ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், ஜியாவுதீன், எஸ். ரமணி, குளச்சல் இப்ராஹிம் மற்றும் திண்டுக்கல் ஜமால் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
அடுத்த தலைப்பு "பெருமை" என்கிற செய்தியுடன் நிறைவுக்கு வந்த இந்தச் சந்திப்பில் நிறைவாக நன்றியுரையாற்றினார் திருமதி. ஜெயாபழனி அவர்கள்.












Click it and Unblock the Notifications