மாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே!
சென்னை: மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கேற்ப பெண்கள் இன்று பல துறைகளில் சாதனைப் படைக்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு நாளும் ஓய்வு கிடையாது. தன் குடும்பத்திற்காக காலம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறாள். உயிர்களை உருவாக்கும் திறமைப் படைத்தவள். அறுசுவை உணவுகளைச் சமைத்து அன்பாய்ப் பரிமாறுவாள். மகளாக தாயாக தங்கையாக மனைவியாக இப்படிப் பலவிதமான உருவங்கள் கொண்டவள். அப்படிப்பட்ட பெண்களைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாளே மகளிர் தினம். இது ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உண்மையில் பெண்களால் மட்டுமே ஒரே நேரத்தில் பத்து வேலைகளைச் செய்யும் ஆற்றல் உண்டு. காலையில் எழுந்தது முதல் பம்பரமாய் சுழன்று வாசலில் கோலமிட்டு காபி போட்டு கணவனை எழுப்பி சமைத்துப் பிள்ளைகளை எழுப்பி அவர்களைப் பள்ளிகளுக்குத் தயார் செய்து உணவுப் பொட்டலங்கள் கட்டி வைத்து எல்லோரையும் அனுப்பி விட்டு அவள் காலை உணவு உண்ணும் போது மணி பத்தாகி விடும்.
பிறகு வீட்டைச் சுத்தம் செய்து துணிகளைத் துவைத்துப் போட்டால் மணி ஒன்று. இடையில் பேங்க் வேலை அல்லது போன் பில் கட்டுவது போன்ற வேலைகள் இருக்கும். மதியம் உணவு உண்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றுக் குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்து பாத்திரங்கள் துலக்கி துணி மடித்து வைத்து அவர்கள் ஹோம்வொர்க்கை முடிக்கச் செய்து ஆபிஸில் இருந்து வரும் கணவனுக்குத் தேவையானதைச் செய்து இரவு சூடாக உணவுப் பரிமாறி எல்லா வேலைகளையும் முடித்துப் படுக்க இரவு பதினொன்றாகி விடும்.
இதுவே வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் காலை ஒன்பது மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துத் தானும் கிளம்பி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். இதற்கு முடிவே கிடையாது ஏனென்றால் விடுமுறை என்ற வார்த்தையே அவள் அகராதியில் கிடையாது.
வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற சிந்தை மனிதர் தலைக் கவிழ்ந்தார் என்பதற்கேற்ப இன்றுப் பல துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். அன்னை தெரசா கல்பனா சாவ்லா பி.டி.உஷா சாய்னா நேவால் சானியா மிர்சா மேரி கோம் போன்ற எண்ணற்றப் பெண்கள் பல துறைகளில் சாதனைப் படைத்துள்ளனர்.
சிறந்த நிர்வாகத் திறமைப் பெண்களிடம் தான் உள்ளது. அந்த சிறந்த ஆளுமை இருப்பதால் தான் குடும்பம் கோவிலாக மாறுகிறது. நம் நாட்டிலும் இந்திரா காந்தி செல்வி.ஜெயலலிதா அவர்கள் சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்கள்.ஆணுக்குப் பெண்கள் நிகரானவர்கள் அல்ல. ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். வீரமும் விவேகமும் உடையவர்கள். உயிர்களை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள். எல்லாப் பெண்களுமே சக்தியின் உருவம் தான். வேலுநாச்சியார் இராணி மங்கம்மா ஜான்சி ராணி போன்ற வீரமங்கைகளைக் கொண்டது நம் தமிழ்நாடு.
ஆக்கவும் அழிக்கவும் பெண்களால் மட்டும் தான் முடியும் என்பார்கள். அவள் படித்திருந்தால் ஒரு குடும்பமே படித்திருக்கும். அவளுக்கு நிகர் அவள் தான். பெண்களுக்கு மனதைரியம் அதிகம் உண்டு. பின்னால் நடக்கவிருப்பதை முன்னரே நமக்குக் கூறும் சக்தி பெண்களுக்கே உரித்தானது. அதனால் தான் பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். அப்படிப்பட்ட பெண்களைப் போற்றுவோம். அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.