துபாயில் நடந்த புனித மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
துபாய்: துபாய் ஸுன்னத் வல் ஜமாஅத் சார்பில் தேரா கோட்டைப் (சிறிய ஜர்வூனி) பள்ளியில் 15-05-2015 அன்று இரவு புனித மிஃராஜ் (நபிகள் நாயகம் விண்ணுலகம் சென்று இறைவனை சந்தித்த) இரவு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த மரியாதைக்குரிய அஷ் ஷைகு ஆரிஃப்பில்லாஹ் திண்டுக்கல் காஜா முஹ்யித்தீன் (ஆசிரியர், இஸ்லாம் டைரி மாத இதழ், சென்னை) மிஃராஜ் சிறப்பு உரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து தஸ்பீஹ் சிறப்புத் தொழுகை, திக்ர் என்னும் இறை தியானம் மற்றும் தவ்பா என்னும் பாவ மன்னிப்பு நடைபெற்றது. துஆ என்னும் இறை வேண்டுதலுடனும், நபிகள் நாயகத்தின் புகழ் பாடும் ஸலாம் பைத்துடனும் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

ஆயிரக்கணக்கான மக்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெற்றனர். பள்ளியின் கீழ்த்தளம் நிறைந்து விட்டதால், மேல் தளத்திலும் இட வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கீழக்கரை அப்துல் ஒஃபூர் தலைமையில், கீழக்கரை முஹம்மது மஃரூஃப், மேலத்திருப்பந்துருத்தி முஹம்மது ஜலால்தீன் (ராவுத்தர்), அத்திக் கடை முஹம்மது ஹுஸைன், திருச்சி முஹம்மத் இத்ரீஸ் மற்றும் சகோதரர்கள், நாகூர் சுலைமான், கீழக்கரை ஹமீது ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications