துபாயில் வானலை வளர் தமிழ்-தமிழ்த் தேர் நடத்திய முப்பெரும் விழா
துபாய்: வானலை வளர் தமிழ்-தமிழ்த் தேர் 101வது இதழ் ‘நூற்றுக்கு நூறு' சிறப்பிதழ் வெளியீடு, சர்வதேச அன்னையர் தினம் மற்றும் உழைப்பாளர் தினம் என "முப்பெரும்விழா" கடந்த 27ம் தேதி அன்று கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
எஸ்.என்.ஜி. குழும தலைமை அலுவலகத்தின் முதன்மை மேலாளர் திரு.மீரான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
செல்வி. ஆனிஷா பானுவின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவை, அழகான முறையில் திருமதி ரமா மலர்வண்ணன் தொகுத்து வழங்கினார். திரு. ரமணி ராஜன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் சுருக்கமான உரையில் வரவேற்று அமர்ந்தார். புதுமுகம் அறிமுகம் நிகழ்ச்சியில் கணேஷ், ரங்கசாமி, காயத்ரி ரங்கசாமி, சங்கரசுப்ரமணியம், ரத்தினவேல், திருமதி. ராதாரமணி மற்றும் தினேஷ் ஆகியோர் தமிழ்த்தேரில் பங்கு கொள்ள வாய்ப்பு அமைந்தது குறித்தும், தமிழ் மீது தங்களுக்குள்ள ஆர்வத்தையும் கூறி, தங்களின் அறிமுகத்தையும் வழங்கினர்.
அடுத்து, தமிழ்த்தேரின் சிறப்பம்சமான கவியரங்கம் ‘நூற்றுக்குநூறு' தலைப்பில் ஜியாவுத்தீன் மற்றும் நர்கிஸ் ஜியாவுத்தீன் ஆகியோர் இணைந்து நடத்தினர். கவிஞர்கள் ஒவ்வொருவரையும் ஜியாவுத்தீன் வரவேற்ற விதமும், கவிதைகள் பற்றிய விமர்சனத்தை நர்கிஸ் அவர்கள் அளித்த விதமும் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்ந்தது.
கவியரங்கத்தில் ரமா மலர்வண்ணன், ஹேமலதா, அஞ்சுகா, தமிழன் யமுனாலிங்கம், ஜெயராமன் ஆனந்தி ஆகியோர் தங்கள் கவிதைகளைப் பகிர்ந்துகொள்ள, நிறைவாக நர்கிஸ் மற்றும் ஜியாவுத்தீன் தங்களது கவிதைகளை வழங்கினர். நிகழ்வில் கருத்தரங்கில் சசிகுமார், முத்துப்பேட்டை சர்புதீன், வெற்றி வேல்செழியன், தஞ்சாவூரான் ஆகியோர் தமிழ்த்தேர் குறித்தும் தமிழ் மொழி, கவிதை குறித்தும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். சசிகுமார் அவர்கள் அன்னையைப் பற்றியும், அன்னை தான் முதல் உழைப்பாளர் என்கிற வகையில் அழுத்தமாகவும், உருக்கமாகவும் பேசினார்.
அடுத்து திரு. ரமணி ராஜன் முன்னிலை வகிக்க திரு.மீரான் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் முதல் மேடைப் பேச்சு இது என்று குறிப்பிட்டுப் பேசினாலும், ஒரு தேர்ந்த பேச்சாளர் போல் அவர் பேசியது பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. தமிழ்த்தேரின் தனித்துவத்தையும், 100 இதழ்களின் வெளியீடு நிகழ்ச்சிகளும் நூறுவிழாக்களாகக் கருத வேண்டும் என்று குறிப்பிட்டு, ஒரு விழா நடத்துவதில் உள்ள சிரமங்களைக் கூறி, இதைப் போன்று 1௦௦ விழாக்களை நடத்தியதைப் பாராட்டிப்பேசி, விரைவில் கவிப்பேரரசு வைரமுத்து போன்ற பிரபல கவிஞர்களையும் அழைத்து வந்து கலந்துரையாடலுடன் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த உதவுவதாகவும், இதன் மூலம் தமிழ்த்தேர் இன்னும் முன்னேற்றமும் வளர்ச்சியும் காணும் என்று குறிப்பிட்டதுடன், தமிழ்த் தேர் கவிஞர்களின் திறனையும் ஆர்வத்தையும் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டினார். அன்னையர்தினம் குறித்தும், உழைப்பாளர்தினம் குறித்தும் தன் பங்குக்கு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திரு.மீரான் அவர்களுக்கு ஜியாவுத்தீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார், சசிகுமார் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த பார்வையாளர்களும் திரு.கணேஷ் அவர்களின் பெற்றோருமான திரு.மணிசுந்தரம், திருமதி.விசாலாக்ஷி ஆகியோருக்கு ஒரே பொன்னாடையை ரத்தினவேல் அணிவிக்க அவையோர் கரகோஷம் எழுப்பினர்.
தாயகத்திலிருந்து வந்து கலந்து கொண்ட திருமதி. ராதாரமணிக்கு நர்கிஸ் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். அடுத்து தமிழ்த்தேரின் 101வது இதழ் ‘நூற்றுக்குநூறு' சிறப்பிதழின் முதல் பிரதியை திரு.மீரான் வெளியிட, ரமணி ராஜன் பெற்றுக் கொண்டார். இரண்டாவது இதழை தினேஷ் வெளியிட ரங்கசாமியும், மூன்றாவது இதழை மணிசுந்தரம் வெளியிட, குளச்சல் இப்ராஹிமும், நான்காவது இதழை யமுனாலிங்கம் வெளியிட தஞ்சாவூரான் ஃபாரூக்கும், ஐந்தாவது இதழை ரமா மலர்வண்ணன் வெளியிட ஹேமலதாவும் பெற்றுக் கொண்டனர்.
அடுத்ததாக கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கவிஞன்' என்கிற அறிவிப்புடன், வெற்றிவேல் செழியன் நன்றியுரைக்க, சிவ்ஸ்டார்பவன் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.