சிங்கப்பூரில் கவிதைக்கு சிறப்பு செய்யும் கவிமாலை சந்திப்பு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கவிமாலை சந்திப்பின் 211ஆவது நிகழ்ச்சி நடந்தது. அதில் கவிதை விமர்சனமும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள், தங்கள் தாய்மொழியாம் தமிழை வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கென பல வாசகர் வட்டங்களை வைத்துள்ளனர்.
அம்மாதிரியான இலக்கிய வாசகர் வட்டங்களில் சங்க கால இலக்கியம் மட்டுமின்றி சமகால இலக்கியத்தையும் போற்றி வருகின்றனர். இதற்காக தாயகத்தில் இருந்து சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களை அழைத்து உரையாடலை நிகழ்த்துகிறார்கள்.

கவிமாலை சந்திப்பு
சிங்கப்பூரில் ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமை கவிமாலையின் சந்திப்பு நடைபெறும். கடந்த சனிக்கிழமை கவிமாலையின் 211-வது சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் முதலாவதாக படித்ததில் பிடித்த அங்கம் நடந்தது. அதில் கவிஞர்கள் தங்களுக்கு பிடித்த கவிதைகளை வாசித்தார்கள்.

சமகால கவிதைகள்
அதனைத்தொடர்ந்து போட்டிக்கு வந்த கவிதைகளில் சில கவிதைகளை எடுத்துக்கொண்டு கவிதை விமர்சனம் செய்தனர். அதில் கவிஞர்கள் அந்தக் கவிதைகளில் உள்ள நிறை குறைகளை பகிர்ந்துகொண்டார்கள்.

கவிதைப் போட்டி
அடுத்ததாக கவிமாலைக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய நூலை கவிஞர்.கி.கோவிந்தராசு விமர்சனம் செய்தார். மேலும் தலைமையுரை,மாணவர்கள் கவிதை வாசிப்பு, போட்டிக்கவிதை வாசிப்பு, வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசளிப்பு என சில அங்கங்களோடு கவிமாலை நிறைவை எட்டியது.

கவிஞர்கள் கூட்டம்
நிகழ்ச்சியை கவிஞர் பாலமுருகன் நெறிப்படுத்தினார். நிகழ்வில் கவிமாலையின் காப்பாளர் மா.அன்பழகன்,சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் மற்றும் பல கவிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தி: தங்கமணி கணேசன்












Click it and Unblock the Notifications