கபிலன் வைரமுத்துவின் இன்னொரு முகம்
"வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்" என்று ஜீவா திரைப்படத்தில் திருவாசகமாய் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலின் லிரிக் வீடியோ யூ ட்யூபில் பட்டையைக் கிளப்பியது.
அது படத்தில் இடம்பெறாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். இவரும் காதல் பாடல்கள் மட்டும்தான் எழுதுவார் போலிருக்கிறது என்று நினைக்கும்போது வெளிவருகிறது வெண்ணிலா வீடு.
"சிலுசிலு மழையும் நஞ்சானதே ஒரு சிலந்தியின் வலையா நெஞ்சானதே" என்று ஒலிக்கும் ஒரு பேத்தோஸ் சாங் சூப்பர் ஸ்டாரின் ஊர தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் ரேஞ்சுக்கு நம்மை உலுக்கி எடுக்கிறது.
ஏற்கனவே இவர் எழுதிய பூமரேங் பூமி, உயிர்ச்சொல் போன்ற சமூகவியல் உளவியல் நாவல்கள் இவரை ஒரு பக்கம் செம சீரியஸ் ரைட்டராக அடையாளப்படுத்திய போது கடந்தமாதம் இவர் வெளியிட்டிருக்கும் மெய்நிகரி என்ற நாவல், இளமையும் நகைச்சுவையும் கலந்த ஒரு ஜாலி அனுபவமாக இருக்கிறது. இதெல்லாம் நாடறிந்ததுதான். ஆனால் கபிலனுக்கு இன்னொரு முகமும் உண்டு.
சிறு வயது முதலே கபிலன்வைரமுத்து ஒரு நேர்த்தியான மேடை பேச்சாளர். சமீபத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் அரசியல் பற்றி கபிலன் பேசிய பேச்சை கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்து கேட்டனர்.
கல்லூரி விழாக்களில் பேசும்போது கபிலன் சொல்லும் வாழ்க்கையின் மூன்று பருவம் மாணவர்கள் மத்தியில் பிரபலம். பொதுவாக கவிப்பேரரசு வைரமுத்து மைக் பிடித்தால் சபை கட்டுப்பாட்டுக்கு வரும். விழா களைகட்டும். நகரத்தில் வளர்ந்து ஆஸ்திரேலியாவில் படித்த கபிலன்வைரமுத்துவிடம் அந்த ஆளுமையின் சாயல் இருப்பது ஆச்சரியம்தான்.