மார்கழி பூஜை: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!
கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?
திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
பொருள்: நம்மைப் பிணைக்கின்ற இந்த பிறவித் துயரைப் போக்கும் பொருட்டு , நம்மால் கொண்டாடப்படும் தூய்மையான இறைவன், வானத்தையும், உலகத்தையும், மற்ற எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும் தில்லைச் சிற்றம்பலத்தில் தீ கொண்டு ஆடும் கூத்தன்,
நம் தலைவனான இறைவனின் பொற்பாதத்தை வணங்கி, அவன் புகழைப் பேசிக்கொண்டு, வளையல்கள் ஒலியெழுப்ப, நீண்ட மேகலைகள் அசைந்து ஒலியெழுப்ப, அலங்கரிக்கப்பட்ட சுருண்ட கூந்தலின் மேல் ஏறி வண்டுகள் மொய்க்க , பூக்கள் நிறைந்த பொய்கையில் முழுகி விளையாடி பெரிய சுனை நீரில் நீராடுவோம்.












Click it and Unblock the Notifications