துபாயில் நடந்த 'விவேக் 150' சிறப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட் 'விவேக் 150' எனும் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவினை நினைவு கூறும் சிறப்பு நிகழ்ச்சியை 21.09.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், விரைவில் தான் துபாயில் பணிநிறைவு பெற்று வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்லவிருப்பதாகக் கூறினார். கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையினை இளைஞர்கள் தெரிந்து கொள்வதுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்வில் உயரிய நிலையினை அடைந்திட அவரது கொள்கைகள் உறுதுணையாக இருக்கும் என்றார்.
அமெரிக்க தியானப் பயிற்சியாளர் பிலிப் கோல்ட்பெர்க் வருங்காலத் தலைமுறைக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தி எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அமெரிக்க மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சகோதர, சகோதரிகளே எனத் துவங்கிய உரை அனைவரையும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். அவரது வாழ்வில் தியானம், தன்னம்பிக்கை உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டார். இவையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் இன்றியமையாதது என்றார்.
நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிளாசிக்கல் ரிதம் அமைப்பின் சார்பில் நடன நாடகம் நடைபெற்றது.
முன்னதாக விவேகா தர்ஷன் எனும் புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது. கண்காட்சியினை கோவிந்தாஸ் ரெஸ்டாரென்டின் நிர்வாக இயக்குநர் மஹேஸ் அத்வானி துவக்கி வைத்தார்.
மோகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இந்திய நலச்சங்க கன்வீனர் கே. குமார், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தின விழா இந்தியா மற்றும் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்திய அரசு சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தின விழாவினை 2013 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என தீர்மானித்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டதன் காரணமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.