வேகமான வாழ்க்கையில் என்னங்க சுவாரஸ்யம் இருக்கு.. இதை படிங்க!
சென்னை: வேகமான வாழக்கைக்கு வேகத்தடை போடும் திறமையை கடவுள் பெண்களின் கையில் கொடுத்திருக்கார். பெண்கள் நினைத்தால்வீடும் கோயிலாகும்.
இதுகுறித்து நமது வாசகர் கலை எழுதியுள்ள ஒரு சிறு கட்டுரை.
வேகமான வாழ்க்கை சூழலும் இதனால் நாம் செயல்படும் வேகத்தில் கோபமும், இப்படிப்பட்ட கோபத்திலே வாழ்க்கையை கடந்து செல்லும் நமக்கு ஒரு அமைதி தேவைங்க.
அதை மறந்து வேகமா வாழ்க்கையை வாழ்றதுல என்னங்க சுவாரசியம் இருக்கு?!. இந்து ஸ்தலங்களில் எல்லாம் பூஜை செய்யும் இடத்தில் ஆண்களே இருந்தாலும் , ஒவ்வொரு வீட்டையும் கோவிலாக்கும் திறன் பெண்களுக்கே உரிய சிறப்பு அம்சமாகும். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திறமையை கொடுத்த அதே கடவுள் தாங்க கோபத்தையும் கொடுத்திருக்கான்.
கோபம்
அதிலும் இன்றைய காலத்து பெண்களுக்கு தாங்க கோபம் அதிகமாயிருக்கு. கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன், அதே கோபத்தை சற்று அடக்கியாளும் ஆற்றல் நமக்கு இல்லாமலா போய்விடும். இந்த காலத்துல கால சக்கரம் வேகமா சுத்துதோ இல்லையோ கால் சக்கரம் அதிவேகமாக சுத்துங்க. அதிலும் பருவ பெண்கள் வேகமா சுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
எல்லாமே வேகம்
படிப்பில் வேகம், வேலையில் வேகம் , எல்லாவற்றிலும் நாம முதல் இடத்தில் இருக்க வேண்டும், எல்லாம் நமக்கு மட்டும் முதலில் கிடைக்க வேண்டும் என்ற பேராசையை தூக்கி போடுங்க. பிறகு பாருங்க மாற்றத்தை.. மனதளவிலும், அறிவிலும்.
ஃப்ரீயா விடுங்க பாஸ்
பெற்றோர்களே நீங்க சும்மா இல்லனாலும் பரவாயில்லை உங்கள் பிள்ளைகள் மீது உங்களோட பேராசையை திணிக்காம அவர்களை ப்ரீயா விடுங்க. முன்பெல்லாம் 13 -21 வயது வரை மறக்கமுடியாத நாட்களை தான் கடந்துருப்போம். ஆனால் இன்று அது அப்படியா இருக்கு.. அதை விட அது சாத்தியமற்றதும் கூட. இதற்கு காரணமும் நாமதாங்க.
அழுதாலும் கிடைக்காது
இதில் ஒரு விஷயம் கவனிச்சு பார்த்தால் அது நமக்கே புரியும். அந்த காலத்துல எதை செய்தார்களோ இல்லையோ நாம எது கேட்டாலும் கிடைக்காது என்ற விஷயத்தை நம்ம மனசுல நல்லா பதிய வச்சிருப்பாங்க. ராஜா என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ, எவ்வளவு வேணும்னாலும் அழுதுக்கோ.. ஆனால் ஒன்னும் கிடைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிய வைப்பாங்க. அதற்கு காரணம் நமக்கு வாங்கித்தர கூடாதென்பதற்கு அல்ல. நாம ஆசைப்படுவதெல்லாம் நமக்கு கிடைக்காது என்பதை உணர்த்த தாங்க.
பொறுமை தேவை
இது தாங்க உண்மையான பாசத்துடன் பிள்ளைகளை வளர்க்கும் அழகு. இதை கடந்து வந்த நாமே நம்ம பசங்க பாக்கிறது, கேக்கிறது, நினைக்கிறது , நினைக்காதது எல்லாத்தையும் வாங்கி கொண்டு வந்து கொடுத்து கெடுத்து விடுகிறோம். பசங்களுக்கு எதுவுமே சுலபமா கிடைக்காது , எது வேண்டுமென்றாலும் பொறுமையா இருந்தா மட்டும் தான் கிடைக்கும். கோபப்பட்டால் அதுவும் கிடைக்காது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை உணர்த்தி விட்டாலே போதும், வேகமும் குறையும் கோபமும் குறையும், வாழ்க்கையையும் ரசித்து வாழ்வாங்க.
என்ன நான் சொல்றது சரிதானே!
- கலை