பெங்களூருவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13-வது மாநாடு.. தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13-வது மாநாடு நடைபெற்றது.
சென்னை: உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பாக பெங்களூரில் வெகுசிறப்பாக நடைபெற்ற 13-வது மாநாட்டில் இலங்கை, மலேசியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். நம் தமிழின் மேன்மையையும் தமிழின் மகோன்னதத்தையும் போற்றும் வகையில் கவியரங்கம், ஆய்வரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளும் இந்த மாநாட்டில் நடத்தப்பட்டன.
கர்நாடக கிளை தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மலேசிய தலைவர் ப.கு.சண்முகம், ஆசிய ஒன்றிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இரா.மதிவாணன், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை தலைவர் மீனாட்சி சுந்தரம், பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இந்த மாநாட்டினை சிறப்பித்தனர்.

புலவர் வெற்றியழகன் தலைமையில் கவியரங்கம் நடத்தப்பட்டது. "சங்க காலத் தமிழ்ப் பண்பாடு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கவியரங்கத்தில் கவிஞர்கள் மருது, கொ.சி.சேகர், பா.மூர்த்தி உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர்.
இதனை தொடர்ந்து முனைவர் ப.மகாலிங்கம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. "தமிழரின் விருந்தோம்பல்" என்ற தலைப்பில் அனைத்திந்திய தமிழ் சங்க பேரவையின் தலைவர் மீனாட்சிசுந்தரம் கருத்துரை ஆற்றினார். அவரை தொடர்ந்து, "தமிழரின் அறிவியல்" என்ற தலைப்பில் முனைவர் பா.பானுமதி உரையாற்றினார். அதேபோல,"தமிழரின் உலகக் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் முனைவர் லலிதா சுந்தரம் உரையாற்றினார்.
கருத்தரங்கம் முடிந்தநிலையில் ஆய்வரங்கம் தொடங்கப்பட்டது. முனைவர் நித்திய கல்யாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கத்தில் பேரா.எஸ்.ராஜசேகரன் "தமிழரின் வரலாறு" என்ற தலைப்பிலும், குறும்பட இயக்குநர் அமலன்ஜெரோம் "தொடக்கக் கல்வியில் தமிழின் பங்கு" என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
இந்த இயக்கத்தின் மலேசிய தலைவர் ப.கு.சண்முகம் தலைமையில் நடந்த அயலகத் தமிழ் முற்றம் எனும் அரங்கில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மிக்கி செட்டி, ராதா பிள்ளை, மேஸ்திரி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். நிகழ்ச்சியின் இறுதியாக, தமிழ் சமூகத்துக்கு பங்காற்றியமைக்காக கர்நாடக உலகத் தமிழ் கழகத்தைச் சேர்ந்த தங்கவயல் தென்னவன், சி.பூ.மணி, மலேசிய கவிவாணர் ஐ.உலகநாதன் ஆகியோருக்கு தமிழ் பண்பாட்டு காவலர் விருது வழங்கப்பட்டது.
மாநாட்டின் முத்தாய்ப்பாக, தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் நாட்டுப்புற நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டன. இந்த மாநாட்டில் இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications