வாஷிங்டனில் 'உலகத் தமிழ் அமைப்பின்' வெள்ளி விழா: தமிழகத் தலைவர்கள் பங்கேற்பு
வாஷிங்டன்(யு.எஸ்) அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பி வெள்ளி விழா,அக்டோபர் 8ம் தேதி வாஷிங்டன் வட்டாரத்தில் நடைபெற உள்ளது.
மலேசியா பினாங்கு துணை முதல் அமைச்சர் டாக்டர் ப.இராமசாமி மற்றும் தமிழகத்திலிருந்து வானதி சீனிவாசன் உட்பட பல தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
உலகத் தமிழர்களின் நலனுக்காக
உலகத் தமிழ் அமைப்பு 1991 ஆம் ஆண்டு வணிக நோக்கமற்ற அமைப்பாக தொடங்கப்பட்டு, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது.

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை பேணிக்காத்து மேலும் செழிப்புடன் வளர்ச்சி அடைவதற்காக இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் , தமிழர்கள் இழந்த இறையாண்மையை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்று பெருமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் உலகத் தமிழ் அமைப்பு பாடுபட்டு வருவதாக, அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், வாஷிங்டன் டல்லஸ் விமான நிலையம் அருகே உள்ள அல்டை நகர மெர்சர் நடுநிலைப் பள்ளி அரஙகத்தில் வெள்ளி விழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
மலேசிய துணை முதலமைச்சர்
விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் டாக்டர் ப இராமசாமி கலந்து கொள்கிறார். சிறப்புப் பேச்சாளர்களாக, நாடுகடந்த தமீழீழ அரசின் உருத்திரகுமாரன், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பெ.மணியரசன், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், கல்கத்தா ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளர் சாம் ராஜப்பா, முன்னாள் எம்.எல்.சி செ.முத்துசாமி, டாக்டர் ம நடராஜன்( நிறுவனர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்), மொழி நிகர்மை - உரிமை பரப்பியக்கத்தின் ஆழி செந்தில்நாதன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள், தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு, தமிழர் உரிமைகள், வெளியுறவுக் கொள்கையும் தமிழர் நலமும், தந்தை பெரியார் பிறந்த நாள் நினைவு மற்றும் பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறும்.
வெள்ளிவிழாவில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணமும், உணவுக் கட்டணமும் கிடையாது. http://worldthamil.org/news/silver-jubilee- registration என்ற இணையப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத் தலைவர்கள் வாழ்த்து
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு வெள்ளி விழா மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2012 ஃபெட்னா விழாவுக்கு அவருடைய வருகையை நினைவு கூர்ந்து, அமெரிக்கத் தமிழர்களின் தமிழ்ப் பணிகளையும் பாராட்டியுள்ளார்.
மேலும் பழ. நெடுமாறன், திராவிடக் கழக தலைவர் கி. வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் காசி ஆனந்தன், சி.மகேந்திரன், விடுதலை இராசேந்திரன், பெ.மணியரசன், தேனிசை செல்லப்பா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், தியாகு, சமர்ப்பா குமரன், புஷ்பவனம் குப்புசாமி, நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட பலரும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்
உற்றார் உறவினர் நண்பர்களுடன் திரளாக கலந்து கொண்டு , நேரில் பார்த்து அளவளாவி கலந்துரையாட வருமாறு, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் டாக்டர் வை.க.தேவ் அழைப்பு விடுத்துள்ளார்.
வாஷிங்டன் வட்டார தமிழர்களுக்கு ஒரு நாள் முழுக்க தமிழர்களுடனும், தமிழ் மொழியுடனும் இணைந்து இருக்கும் வாய்ப்பாகவும் இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications