மக்களின் குறைகளை தீர்ப்பதற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்! உ.பி முதலமைச்சர் யோகி பேச்சு
லக்னோ: மக்களின் குறைகளை தீர்ப்பதற்குதான் உத்தரப் பிரதேச பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை. எனவே யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். இதனையடுத்து பாஜக யோகி ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மக்கள் பிரச்னைகளில் யோகி அரசு கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த அவர், "மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே அரசின் முதன்மையான பணி" என்று கூறியுள்ளார். கோரக்நாத் கோவிலின் மஹந்த் திக்விஜய்நாத் ஸ்மிருதி பவனுக்கு வெளியே மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், "மக்களின் பிரச்சினைகள் உரிய நேரத்தில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும். சில நேரங்களில் இதற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டாலும், நிரந்தர தீர்வுதான் அரசின் நோக்கம்.
நான் இருக்கும் வரை நமது மாநிலத்தில் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு சிலர் தங்களின் மின் கட்டணம் குறித்து கோரிக்கை மனுவை அளித்திருக்கிறீர்கள். அவர்களுடைய மனு பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். அதேபோல மருத்துவ சிகிச்சை குறித்து பலரும் மனு அளித்திருக்கின்றனர். எனவே அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications