கிராமத்து ஞானபீடம்- நா.முத்து நிலவன்
காலை வணக்கத்தில்
நேர் நில் சொல்லியும்
நிமிர்ந்து பறக்கச் சக்தியற்று
தர்மசக்கரத்தை மறைத்து
தேசியக்கொடி தரை பார்க்க,
மாணவர் ஊர்வலம்
மரத்தடி வகுப்புக்கு
மவுனமாய்ச் செல்லும்.
ஐந்து வகுப்பிலும்
அறுபத்தேழு பேர்சொல்லி
வருகை பதிவதற்குள்
மணியடித்துவிடும்,
அடுத்த வகுப்பு துவங்கும்.
பெரியாரைப் பற்றிய
உரை நடைக்குமுன்
கடவுள் வாழ்த்தோடு
செய்யுள் தொடங்கும்
உலகப் படத்தில்-
பாற்கடலைத் தேடும்
இலக்கியம்.
ஆண்டவனைக் காப்பாற்றும்
அறிவியல்.
ஆள்பவரைக் காப்பாற்றும்
வரலாறு.
வறுமைக் கோடுகளை மறைத்து
வடஅட்சக் கோடுகளைக் காட்டும்
புவியியல்.
கடன்வாங்கச் சொல்லித்தரும்
கணக்கு.
கிழிந்த சட்டை,
நெளிந்த தட்டோடு
அச்செழுத்துக்களை மேய்ந்த
அஜீரணத்தில் மாணவர்.
எலேய்! எந்திரிச்சு வாடா
அவ்வப்போது வந்து
அழைக்கும் பெற்றோர்.
உபகரணங்கள் இல்லாமல்
பாவனையில் நடக்கும்
செய்முறைப் பயிற்சி.
அவசரத்தில்
தின்றதை வாந்தியெடுக்கும்
தேர்வுகள்.
பழைய மாணவர் எம்.எல்.ஏ ஆகி
பள்ளிக்கு வந்தார்.
ஆசிரியர் கையை
ஆதரவாய்ப் பற்றி,
கோரிக்கை ஏதுமுண்டா
கூறுங்கள் என்றார்-
நிரந்தரப் படுத்தணும்
நீயும் சொல்லணும்
திறந்த உலகம்தான்
சிறந்த படிப்பாம்,
எங்கள் பள்ளிக்குக்
கதவே கிடையாது-
கட்டடம் இருந்தால்தானே?
எங்கள் பள்ளி நல்ல பள்ளி
கட்டடம் இரண்டு பூங்கா ஒன்று
-நடத்துவார் சிரியர்.
எங்கேசார் இருக்குது?
மரத்தடி மாணவன்
எழுந்து கேட்பான்.
புத்தகத்தைப் பார்ரா
போடுவார் ஆசிரியர்.
போதிமரத்தடியில்
புத்தருக்கு ஞானம்,
புளியமரத்தடியில்
மாணவர்க்குப் பாடம்.
இதுவே-
எங்கள் கிராமத்து
ஞானபீடம்!
- நா.முத்து நிலவன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications