ஒரு மழை நாளில்....சுகமான தோள் பயணம்
Subscribe to Oneindia Tamil

மழைப் பருவம் மயக்கியது
மண் மணக்கும் வீதியில்
நீர் குட்டைகளைக்
கலைக்கும் மழை
நானும் கலைக்க முனைய,
உடனே என்னை
உயர்த்தி தோளில்
சாய்த்துக் கொண்டார்.
விநோத பாஷையில்
வியாதி ஒன்றைச் சுட்டி
தோள் சவாரியும் சுகம்தான்....
குடை, உலகை மறைக்க,
கஷ்டப்பட்டுத்தான் அதைக்
கண்ணிலிருந்து துரத்தினேன்
கடவுளிடம் கேட்டு
நானே மேகப்பஞ்சைப்
பிழிய வேண்டும்....
மழை நின்றது
"சாமிக்கே கை
வலிக்குமா என்ன?"
அருகில் ஒரு மரம்
சோம்பல் முறித்து,
துளிகள் தெளித்தது.
நின்று கொண்டே இருக்கின்றன.
அவை சோம்பேறிகள்.
அட வண்ணமயமாய் பூச்சிகள்!
கடவுள் ஏதேனும்
சேதி சொல்லி அனுப்பியிருப்பாரோ?
கோயிலில், அன்று
அவரிடம் ஒன்று கேட்டிருந்தேன்....
வீட்டு வாசலில் இறக்கிவிட்டு
அப்பா சொன்னார்
"அம்மா,... என்ன மழை!"
ஹ்ம்ம்ம்.....அதற்குள் வந்துவிட்டோமே?!
-அனுக்ரஹா ([email protected])












Click it and Unblock the Notifications