கேள்விக்குறிகள்
-கிரி
முற்றுப்புள்ளிகள், கேள்விக்குறிகளாகி விடும் வாழ்க்கையிது;
அவைகளை ஆச்சரியக்குறிகளாக நிமிர்த்திடும் முன்னர், நம்
நிமிர்ந்த முதுகெலும்புகளை குழைந்து வளைத்திடும், காலமிது.
கனவுகள், கனவு கண்ட நினைவுகள்,
கனவெனும் விந்தணு மட்டும் தனியே
கருவாய் வளரத்துடிக்கும் உணர்வுகள் - இவைகள் மிதக்கும்
சாக்கடைப் போல், சமூகச் சந்தைக்கடைகள்.
அந்த சந்தைகளில், விலை போகாததால்
வெள்ளத்தனைய மலர்நீட்டம் பொன்ற, உள்ளத்தனைய மனவாட்டம்.
இருப்பினும் இல்லாவிடினும், இருப்பென்னெவோ, கவலைகள்தாம்
நாளை நல்ல நாளென்று நம்பும் ஆரூடதாசர்கள்,
நேற்றில் மட்டுமே ரசித்து வாழும், இன்றைய நடைபிணங்கள்,
இன்று மட்டும்தான் நம் கையிலென,
இருட்டில் பொழுதைக் களிபுரியும், சிந்தையற்ற நபும்ஸகர்கள், என
இங்கெல்லாம், சிறு பொழுதுகளில் வாழ்ந்து மடியப்போகும் ஜீவராசிகள்தாம்.
நேற்று போல், இன்று போல்,நாளையும் கேள்விகள்தாம் .
அக்கேள்விக்கணைகளால் மடிவதோ ?
'அந்தோ! யாவும் போனதென்று' நம் காலங்கள் முடிவதோ ?
வாழ்வின் மிகப்பெரும் வெற்றி யாதெனக் கேளீர்...
கனவு நிஜமாவதன்று; சித்தம் தவமாவதே.
கை, காசால் நிறைவதன்று; வைராக்கியம் வரமாவதே...
காலங்கள் கழிந்தாலும் கரையாத ஆசைகள்,
கோலங்கள் சிதைந்தாலும் குறையாத மனத்தெளிவு,
இவைகளெல்லாம், காலத்தை வென்றிடாதா ?
யாவும் நிலையில்லை என்றால்,
கேள்விகளும், கவலைகளும் மட்டும் நிலையா, என்ன ?
இந்தக் கேள்விக்குறிகளை புணர்ந்து, ஆச்சரியக்குறியாக்கிவிடுவோம் !
இந்தத் திறம் கொண்டு,
இன்னும் பல கேள்விகளை நாம் காதலித்துப் புணர்ந்து,
நம் கவலைகட்கு, புணர்ஜென்மம் புலரட்டும்....
-கிரி ([email protected])












Click it and Unblock the Notifications