வெள்ளிக்கிழமையும் வெண்காற்சட்டையும்.. வேண்டாமே!
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு வெண்ணிற சீருடையால் ஏற்படும் பெரும் சிரமத்தை தனது கவிதை வரிகளில் விளக்கியுள்ளார் கெளசல்யா. மகளிர் தினத்தையொட்டி எழுதப்பட்ட இந்த கவிதை, மாணவிகளின் துயர் துடைக்கும் உதவும் என்றால் மகிழ்ச்சியே.
வெள்ளிக்கிழமையும் வெண்காற்சட்டையும்
ஊர் கூட்டி சீர்சடங்கு செய்து சொல்லியாயிற்று
பருவம் எய்தினாள் என்று
இயற்கையே இதுவென இலகுவாய் எடுத்துக்கொள்ளப் பழக்கியும் ஆயிற்று.
ஆனால் கண்களில் ஏனிந்த மிரட்சி
ஓகோ !?
வெள்ளிக்கிழமை !
வெள்ளைச் சீருடை அதுவும்
வெள்ளைக் காற்சட்டை !!!
வகுப்பறை காலியாகக் காத்திருந்து
மனமறிந்த தோழி கொண்டு
கறையிலையென உறுதிபடுத்திக் கொண்டு
கடத்தும் ஒவ்வொரு பொழுதும் பெண்
கடவுளாயினும் மன அழுத்தம் தரும் !
எதிர் நீச்சல் போடும் என் குல பெண்களே!
வெண்சீருடை வேண்டாம் - அதுவும் விளையாட்டுச் சீருடையாக
வெண்சீருடை வேண்டாம்
முன்னேறிச் செல்லும் பெண்ணை
பின்னே பின்னே திரும்பிப் பார்க்கச் சொல்லும் வெண்சீருடை வேண்டவே வேண்டாம்.