காதல் என்னும் மாயம்!
- ஆகர்ஷிணி
சென்னை: நமது வாசகர் ஆகர்ஷணியின் காதல் குறித்த ஒரு கவிதை..
காதல் போன்றதொரு....
வலியும் இல்லை புறக்கணிக்கப்பட்டோர்க்கும், தோல்வியுற்றோர்க்கும்
வலி நிவாரணியும் இல்லை, அது கிடைத்தோர்க்கு
நோயும் இல்லை, அதில் மூழ்கியவர்க்கு
அருமருந்தும் இல்லை, அதற்காக ஏங்கியவர்க்கு
இன்பமும் இல்லை, அதன் இனிமை கண்டோர்க்கு
பெருந்துன்பமும் இல்லை, அதையே நினைவாய் கொண்டவர்க்கு
சொர்க்கமும் இல்லை, அதை அனுபவிப்பவர்க்கு
நரகமும் இல்லை, அது இல்லாது வேதனை கொண்டோருக்கு
ஊக்கியுமில்லை, காதல் வாழ்வில் வென்றிட நினைப்போருக்கு
தடைக்கல்லும் இல்லை, வீழ்ந்து அவதிப்படுவோருக்கு
மிதவையும் இல்லை, நினைவில் மிதப்பவர்க்கு
நங்கூரமும் இல்லை போராட்டத்தில் மீள நினைப்பவர்க்கு
உச்சமும் இல்லை, அதையே பெருமையென நினைப்போருக்கு
பாதாளமும் இல்லை தடுமாறி வீழ்ந்தவர்க்கு
மென்மை உணர்வுமில்லை, மெல்லுணர்வு கொண்டோருக்கு
வன்மை உணர்வுமில்லை, போதை, வெறியாய் அதை கொள்வோருக்கு
உயிரூட்டியும் இல்லை, வாடிடுபவர்க்கு
உயிர்போக்கியும் இல்லை, தோல்வியை தங்கத்தவர்க்கு
விஷமும் இல்லை, மற்றெல்லா உணர்வுகளும் மங்கிடுபவர்க்கு
விஷமுறிவும் இல்லை, நோய் முற்றி நஞ்சென்றானவர்க்கு
மாயமும் இல்லை அதை இல்லையென்று கொண்டோருக்கு
நிதர்சனமும் இல்லை அதுவே வாழ்வென்று கொண்டோருக்கு
ஆக்கவும் அழிக்கவும் கூடிய ஆற்றல் கொண்டது காதல்!