செதுக்க விருப்பமில்லா பாறைகள்..!
இன்னும் பல யுகங்கள் போதாது ....
தாய்மை, பெண்மை உயர்வை
அனைவரும் உணர்ந்து மதிப்பதற்கு
உணராமலேயே போவதற்கும் வாய்ப்புண்டு..
எத்தனையோ புலவர்கள்.. எத்தனையோ அறிஞர்கள்..
தாய்மை, பெண்மை மகத்துவம் பற்றி பேசினாலும்..
கைத்தட்டலின் பின்னே காதிற்குள் நுழைத்து
மனம் வரை அனுமதிப்போர் மிகச்சிலரே...

பேசிப்பேசி மாய்ந்திட்டாலும்,
பாடிப்பாடி அறிவித்தாலும்
நாளும் பெண்மையும் தாய்மையும்
நசுக்கியெறியப்பட்டுக் கொண்டுதான் உள்ளது...
எத்தனையெத்தனை நிர்பயாக்கள் - அதற்கு முன்னும், பின்னும்...
தாயாக ஆவதற்குள்ளேயே மொட்டிலேயே பிய்ந்து போனதும்
எத்தனை நற் தாய்மைகளோ.. கருவறுக்கப்பட்டதும்
எண்ணிலடங்காது பெண்மை எதிர்கொள்ளும் கொடும் வலிகள்...
பெற்றெடுக்கும் வரை உட்சுமக்கும் வலிகள்...
அவையெல்லாம் உள் அசைவில் மறந்து போகும்...
பெற்றெடுத்தபின் உடல் சுமக்கும் வலிகள்..
பிள்ளை வளர்தல் கண்டு மயங்கிப்போகும்...
பிள்ளைகள் வளர்கையில் மறக்கும் வாழ்வின் பல வலிகள்..
இதோ.. பிள்ளை வளர்ந்திட்டால் வலிகள் ஓடிடாதா?
தன்னிலை மீறி பொறுத்திடும் பல்வகை வலிகள்...
அத்தனையும் இனித்திடும்... பிள்ளை சிற்பமாகி விட்டால்....
கல்லொன்றை கண்டெடுத்து தாய்
உளிகொண்டு சிலை வடிக்க ஆசை கொள்வாள்...
சில கற்களோ உளியடி வேண்டாம்- நான்
பாறையாகவே நிற்கிறேனே.... என அடம்பிடிக்கும்...
தன் மகவு உளியடி தாங்கி சிற்பமாய்
கோவில் கருவறையில்... அழகாய் வீற்றிடவும்...
அலங்காரப் பதுமையாய் ஒய்யாரமாய் அமர்ந்திடவும்.
கெஞ்சியும், கொஞ்சியும் கதறியும் அடித்தும் பார்த்திடுவாள்...
தாய்மார்கள் தவம்தான் கிடக்கிறார்கள்..
நல் மகவுகள் தாயின் தவிப்பை புரிந்துணர்ந்து..
அருள் தரும் சிலையாய் கோவில் கருவறையில்
அழகாய் அமர்ந்து வரம் அருள்வார்கள்...
சில மகவுகளோ எனக்கு உளியடி வேண்டாம்...
அது தரும் வலிகள் வேண்டாம்... நான்
இப்படியே இருந்து கொள்கிறேன்... என்று...
துணி துவைக்கும் கல்லாகவோ... சுமை தாங்கி கல்லாகவோ!
சுலபமானதை தேர்வு செய்யும் மகவுகள் அறிவதில்லை...
தாய்க்கு பெருமை தான் சுமை தாங்கியாய் நிற்பதல்ல..
கோவில் கருவறையில் அருள் பாலிக்கும் ஒரு சிலையாய் அமர்ந்து..
தன்னை சுமந்த கருவறையை பலரும் பூஜிக்க வைப்பதே என்று!
சிலை செய்து சமூகத்துக்கு தந்த அத்தனை
தாய்மைகளும் நாளுமே போற்றுதற்குரியன
சிலைகள் தராமல் போன தாய்மைகள் அத்தனையும்
தூற்றுதற்குரியதும் அல்ல... ஏனென்றால்...
அனைத்து மகவுகளும் உளியடி வாங்க ஆசைப்படுவதில்லை...
பல தாய்மார்களுக்கு சிற்பங்கள் தர ஆசையிருந்தும்
உருவாக்கும் சூழல் வாய்ப்பதில்லை....
பல தாய்மார்கள் வாழ்வாதாரத்திற்கே வழியில்லாமல் ....
தன் குடும்பத்தின் வறுமையில் உயிரோடிருப்பதால்
உடல் சுமந்து கொண்டிருக்கிறார்கள்!
போற்றுவோம் தாய்மையை!
- ஆகர்ஷிணி












Click it and Unblock the Notifications