வணக்கம் மகாராஜா!
Subscribe to Oneindia Tamil
வணக்கம் மகாராஜா!
உன்னை வணங்குவது
சட்டமாக்கப்பட்டிருக்கிறது!
கருணை மணாளனே!
நீ குழந்தைகளை வளர்க்கிறாய்!
பூனைகளை வளர்க்கிறாய்!
சகலமும் உன்னால்
வளர்க்கப்படுகின்றன!

பசியில்
குழந்தைகள் விரல் சுவைக்கின்றன...
விரல்களை
வாயிலிருந்து பிடுங்கிவிடுகிறாய்!
குழந்தைகளின் ஆரோக்கியம்
முக்கியம் என்கிறாய்!
பூனைகள் மீனுண்ணக்கூடாது என்கிறாய்!
மீன்களும் பாவம் என்கிறாய்!
குழந்தைகளின் பாலை
மீன்களின் தொட்டியில்
சிரித்துக்கொண்டே ஊற்றுகிறாய்!
கோமாதாக்கள்
உன் அரண்மனையின்
ஆராய்ச்சிமணிகளில்
ஆனந்த ஊஞ்சலாடுவதாக
செய்தி பரவுகிறது...
நல்லபடியாக
காருண்ணியத்தோடு
எல்லாம் நடந்துகொண்டிருப்பதாக
உனக்கு மேலானவனை
நீ வணங்குகிறாய்...
உன் சாம்ராஜ்யத்தின்
வானளாவிய வெற்றிகளாக
வண்ண நீரூற்றுகள்
பீறிட்டு வழிகின்றன
நன்றி மகாராஜா!
உனக்கு நன்றி நவில்வதும்
சட்டமாக்கப்பட்டிருக்கிறது!
- பழநிபாரதி












Click it and Unblock the Notifications