தினம் என்னை தீண்ட விடு!
- ஆனந்த்
சென்னை: கடும் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. வெயிலைக் கண்டு ஓடிப் பதுங்குகிறார்கள் மனிதர்கள். இதை வைத்து நமது வாசகர் ஆனந்த் எழுதி அனுப்பியுள்ள ஒரு வெயில் கவிதை. சூரியனே பாடுவது போல உள்ளது இந்தக் கவிதை.
கோடி மைல்
தாண்டி உனை
கொஞ்ச வரும்
காதலன் நான்.

குடை பிடித்து
தடுக்காதே,
கொள்ளையர்போல்,
முகம்மூடி ஓடாதே ,
மேனி கருக்கும் என
அரிதாரம் பலபூசி,
ஆசையாய் வந்த என்னை
அவமான படுத்தாதே!!
வெள்ளைமேனி
பாழாகும் - இவன்
கரம்பட்ட இடமெல்லாம்
கறுப்பாகும்
வெயிலில் அலையாதே என
விளம்பரங்கள்
பல செய்வான்
அயல்தேச வியாபாரி
நம்பாதே.
அவன் வெள்ளைநிறம்
என் வெறுப்பின் அடையாளம்.
என் அன்பின் அடர்த்தி
குறைவு அவனிடம்,
அதுவே அவன் வெள்ளை.
கருமையே என்
காதலின் ஆழம்.
குத்தும் என் கதிர்கள்
நான் கொடுக்கும் முத்தங்கள்,
மார்பறுக்கும் புற்றுநோயை,
உயிரெடுக்கும் மாரடைப்பை,
உறுப்பழிக்கும் நீரிழிவை,
அடியோடு வேரறுக்கும்
மருத்துவ முத்தங்கள்.
விலகி ஓடாதே,
வந்தென்னை தழுவு
நிறஅழகு
வெறும் மாயை ,
உடல் வலுவே
பேரழகு
தினமென்னை
கொஞ்சநேரம்
உன் அழகுமேனி
தீண்டவிடு,
பிணியெல்லாம்
ஒழித்துவிட்டு
வாழ்வில் இன்பம்
கோடி பெறு.












Click it and Unblock the Notifications