"டேய் நிம்மதியா சாகக் கூட முடியலையேடா".. ஒரு திடீர் தொடர் (2)
சென்னை: நீ விடாக் கண்டன்னா நான் கொடாக் கண்டன்னு சொல்வதைக் கேட்டிருப்போம்.. சீனாவில் அதை நடைமுறைப்படுத்தி கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
தற்கொலை.. உலகளாவிய பிரச்சினை.. சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் சாவது என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு பலருக்கும் மனசு இளகியதாக இருக்கிறது. நேற்று வரை நம்முடன்தான் நல்லா பேசிக் கொண்டிருந்திருப்பார். அடுத்த நாள் தற்கொலைன்னு தகவல் வரும்.. ஒரு சில நொடிகளில் எடுத்த முடிவாக இருக்கும்.
இப்படித்தான் பலரையும் நாம் பறி கொடுத்திருக்கிறோம்... ஏன் சித்ராவையும் அப்படித்தானே நாம் இழந்தோம்.. என்ன காரணத்திற்காக அவர் செத்துப் போனார் என்பது கூட நமக்கு தெரியவில்லையே.. பலருடைய முடிவு இப்படித்தான் சோகத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது.
தொழிலாளர்கள் தற்கொலை
சீனாவில் இப்படித்தான் தொழிலாளர்கள் தற்கொலை செய்வது ரொம்ப சகஜமான ஒன்றாக இருக்கிறது. வேலையிழப்பு, பணிப் பளு, ஊதியக் குறைப்பு, மேலாளர் திட்டுவது என்று பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் தொழிலாளர்கள் அங்கு அதிகம். இப்படியே போய்ட்டிருந்தால் எப்படி என்ற யோசனைக்கு முதலாளிகள் வந்தனர்.
நூதன ஐடியா
குறிப்பாக ஐடி நிறுவனங்கள் எல்லாம் கூட இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தன. தற்கொலை செய்து கொள்வோரில் பெரும்பாலானவர்கள் அலுவலக மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வதுதான் அதிகமாக இருந்தது. யோசித்துப் பார்த்த முதலாளிகளுக்கு உதித்தது அந்த ஐடியா.. பிறகென்ன களத்தில் இறங்கினர்.
வலை வீச்சு
ஐடி அலுவலக வளாகங்களில் இப்போது பிரமாண்ட சைஸில் வலையைக் கட்டி வைத்து விட்டனர். மேலிருந்து யார் குதித்தாலும் சரி, அப்படியே ஜொய்ங்கென்று இந்த வலையில்தான் விழுவார்கள்.. அப்படியே பூப் போல மேலே தூக்கி வந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மறுபடியும் வேலை பார்க்க வைத்து விடுகின்றனராம். இந்த வலை திட்டத்தை அமல்படுத்தியதிலிருந்து அங்கு மேலிருந்து ஜம்ப்படித்து தற்கொலை செய்வது அடியோடு நின்று போய் விட்டதாம்.
எல்லோரும் வரவேற்பு
பாக்ஸ்கான் நிறுவனம்தான் இதை முதலில் செய்தது. காரணம் அந்த நிறுவனத்தில்தான் அதிக அளவில் தற்கொலை செய்து வந்தனர். இதனால் பாக்ஸ்கானில் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டம் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்தே பாக்ஸ்கான் இந்த பாதுகாப்பு வலைத் திட்டத்தைக் கையில் எடுத்தது. இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து தற்போது பலரும் இதை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டனர்.
எங்கெங்கும் நெட் மயம்
எங்கெல்லாம் ஹை ரைஸ் பில்டிங் இருக்கிறதோ அங்கெல்லாம் இதுபோன்ற வலையமைப்பைப் பார்க்க முடிகிறது இப்போது சீனாவில். குறிப்பாக அலுவலக வளாகங்கள் மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிகளிலும் இதுபோன்ற வலைகளை விரித்து வைத்துள்ளனர். தொழில்நிறுவனங்கள் இவ்வாறு செய்வதைப் பார்த்து பல பகுதிகளில் அபார்ட்மென்ட்டில் வசிப்போரும் கூட தங்களது கட்டடம் அமைந்துள்ள பகுதிகளில் வலை போட ஆரம்பித்துள்ளனர்.
உசுரு முக்கியமாச்சே
உயிரைப் போக்குவதற்கு ஒரு விநாடி கூட தேவைப்படாது.. ரொம்ப சீக்கிரமாக அதை செய்து விடலாம்.. ஆனால் ஒரு உயிரை உருவாக்க எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது.. அந்த உயிரைப் பாதுகாக்க எவ்வளவு மெனக்கிட வேண்டியுள்ளது. தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர்.. ஒரு நிமிடம் இதைப் பற்றி சிந்தித்தாலே போதும்.. அந்த எண்ணத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த "வலை வீச்சு" நல்ல ஐடியாதான்!
நல்லதும் பண்றாங்க
சீனாக்காரன் கொரோனாவைக் கொண்டு வந்துட்டானே என்று பலரும் கரித்துக் கொட்டி வருகிறோம். பரவாயில்லை.. அவர்களுக்கு நல்லது செய்யவும் தெரியும் போல என்று இந்த வலையைப் பார்த்தால் புரிகிறது.. வடிவேலு பாணியில் சொல்வதானால்.. இவன் நல்லதும் செய்யுறான்.. கெட்டதும் செய்யுறான்.. இவனைப் புரிஞ்சுக்க தனி பிரெய்ன் வேணும் போல!
(தொடரும்)
[ தொடர் : 1 ]