IT Layoffs: கொத்து கொத்தாக பணிநீக்கம்.. இன்னும் தொடருமாம்! டெக் ஊழியர்களே உஷார்! காரணம் இதுதான்
சென்னை: சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 12,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல பல டெக் நிறுவனங்களில் பணி நீக்கம் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. பணி நீக்க நடவடிக்கைள் மேலும் தொடரும் என்றும் இதற்கான காரணத்தையும் இந்திய மென்பொருள் மற்றும் சேவைத் துறைக்கான வர்த்தக சங்கமான நாஸ்காம் விளக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு திருப்புமுனை கட்டத்தில் இருப்பதாகவும், பல்வேறு டெக் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் பணியாளர்களை சீரமைக்கும் நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

டெக் துறையில் மாற்றம்
இதற்கு காரணம், டெக் நிறுவனங்கள் 'தயாரிப்பு சார்ந்த விநியோக மாதிரிகளை நோக்கித் திரும்புவதுதான்' என்றும் நாஸ்காம் விளக்கியுள்ளது. ஒரு நிறுவனம் தங்களது தயாரிப்பை விற்க வேண்டும் எனில் மார்கெட்டிங் செய்யும். இதற்காக விற்பனை பிரிவும் இருக்கும். வணிகத்தில் இது இரண்டும் முக்கியமானவை. மார்கெட்டிங் என்பது விளம்பரங்களை மேற்கொள்ளுதல், மக்களிடையே தயாரிப்பை முதன்மைப்படுத்துதல் அகும். ஆனால் விற்பனை பிரிவு என்பது நேரடியாக வாடிக்கையாளரை சந்திக்கும் முறை. உதாரணத்திற்கு மருந்து விற்பனை பிரதிநிதியை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஏன் ஆட்குறைப்பு?
அவர் சார்ந்துள்ள நிறுவனம் தங்களது மருந்துகளை டிவி, சோஷியல் மீடியா, ரேடியோ, அச்சு என அனைத்திலும் விளம்பரம் செய்யும். அதைவிட அதிக முக்கியத்துவம் விற்பனை பிரதிநிதிக்கு கொடுக்கும். இந்த விற்பனை பிரதிநிதி ஒவ்வொரு மருத்துவரையும் நேரில் சந்தித்து தங்கள் நிறுவனத்தின் மருந்தை விளக்கி கூறி, பேரம் பேசி முடிப்பார். இதுதான் சந்தைப்படுத்தல் சார்ந்த அணுகுமுறை மற்றும் விற்பனை சார்ந்த அணுகுமுறையாகும்.
புதிய ஸ்டடர்ஜி என்ன?
இது இல்லாமல் இன்னொன்று இருக்கிறது. அதுதான் 'தயாரிப்பு சார்ந்த விநியோக மாதிரி'. Zoom வீடியோ காலிங் சேவைதான் இதற்கான உதாரணம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இது இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பெரும் நிறுவனங்கள் காசு கொடுத்து இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. எழுத்து பிழையை சரிபார்க்க உதவும் Grammarly, கிராபிக் டிசைன்களை செய்ய பயன்படுத்தப்படும் Canva போன்ற சாப்ட்வேர்கள் 'தயாரிப்பு சார்ந்த விநியோக மாதிரிக்கு' உதாரணமாகும்.
டெக் நிறுவனங்கள் பயணிக்கும் பாதை
இப்படியான பாதையை நோக்கிதான் தற்போது டெக் நிறுவனங்கள் நகர்ந்து வருகின்றன. அதாவது தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு பதில், வாடிக்கையாளர்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தயாரிப்பை கொடுக்கின்றன. எனவே வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்குமான பிணைப்பு உறுதியாக இருக்கிறது. எனவே தேவையற்ற துறையில் ஆட்குறைப்பை நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது.
மாற்றங்களை ஏற்படுத்தும் டெக் துறை
நாஸ்காம் இது குறித்து மேலும் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்கள் வணிக நடவடிக்கைகளின் மையமாக மாறி வருவதால், தொழில்நுட்பத் துறை கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இது சேவை வழங்குதல் மற்றும் பணியாளர் மாதிரிகள் இரண்டிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளது.
பணி நீக்கமும், புதிய வேலை வாய்ப்பும்
ஒருபுறம் டெக் நிறுவனங்களில் பணி நீக்கம் தொடர்ந்தாலும், மறுபுறம் திறன் மேம்பாட்டில் இந்தத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. FY25 இன் நான்காவது காலாண்டு நிலவரப்படி, 1.5 மில்லியனுக்கும் அதிகமான வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் GenAI திறன்களில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில், பெரிய IT நிறுவனங்களில் உள்ள 95,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் AI-நேட்டிவ் கிளவுட், எம்படட் AI மற்றும் அப்ளைடு இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகளில் மேம்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர் என்று நாஸ்காம் கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications