குருப்பெயர்ச்சி: கும்பம் ராசிக்கு கூரையை பிச்சுட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. முதலீட்டில் ரொம்ப கவனம்
குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.
குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோர்சனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோர்சனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள்
கும்பம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். உங்கள் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல காலம். வெளிநாடு சென்று கல்வி, வேலை வாய்ப்பு இணைவதற்கான சூழல் உள்ளது. குரு பகவான் ஒன்பதாம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டு.
லாபம்
தந்தை வழி உறவு சொத்துகளில் இருந்தப் பிரச்னைகள் நீங்கி, சொத்து அல்லது பங்கு கைக்கு வரும். குரு பகவான் 11 ஆம் இடத்தையும் பார்க்கிறார். உத்யோகம் மற்றும் தொழிலில் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். மனதில் நிறைய ஆசைகள் உருவாகும்.
முன்னேற்றம்
ஜென்ம சனி விலகியுள்ளது. பணிச்சுமை, குடும்ப சுமை, காரிய தடைகள் என்று படாத பாடு பட்டிருப்பார்கள். அது எல்லாம் தற்போது விலகி நன்மைகள் நடைபெறும். ராகு பகவான் ஜென்ம ராசிக்கு வந்திருப்பதும் நல்ல அமைப்பு. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உங்களுக்கு அனுபவப்பட்ட விஷயத்தில் செய்யும் முதலீடு பல மடங்கு உயரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
செல்வம்
சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். சரியாக திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றிகள் குவியும். நிலம், வீடு, வண்டி, வாகனம், ஆபரணம் என்று செல்வங்கள் கூடும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக நினைத்த பல விஷயங்கள் கைக்கூடும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
கவனம்
உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். சில நேரம் பேராசை காரணமாக இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் எதிலும் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே யாரிடமும் வாக்கு கொடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். முதலீட்டில் சற்று எச்சரிக்கை அவசியம். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்.
ஆரோக்கியம்
உத்யோகத்தில் ஒவ்வாமை, ஜீரணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கழுத்து, முதுகு ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை. உணவில் அதிக எச்சரிக்கை தேவை. கேது ஏழாம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. சந்திரன் சம்பந்தப்பட்ட வழிபாடு நல்லதை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications