குரு பெயர்ச்சி பலன் 2023: 12 ஆண்டுகளுக்குப் பின் மேஷத்தில் அமரப்போகும் குரு..கோடி நன்மை யாருக்கு?
குரு பலன் வந்து விட்டாலே திருமண யோகமும் வந்து விடும். குரு பார்வையால் இந்த ஆண்டு யாருக்கு கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது என பார்க்கலாம்.
சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான சோபகிருது ஆண்டு சித்திரை மாதம் 8ஆம் தேதி ஏப்ரல் 21ஆம் தேதியன்று விடிகாலை 05.14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்ச்சியால் குரு பார்வையால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடையப்போகிறார்கள். குரு பலம் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது யாருக்கெல்லாம் கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்
சுப கிரகமான குரு பகவான் காலச்சக்கரத்திற்கு முதல் வீடான மேஷ ராசியில் அமரப்போகிறார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். குரு பலம் இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்றும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
குருவின் பார்வை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழப்போகிறது. பொன்னவன் குருவின் அருள் பார்வை கிடைத்தால் திருமண யோகம் கை கூடி வரும் எனவேதான் திருமணத்திற்கு வரன் பார்க்கும் போதே குரு பலம் வந்து விட்டதா என்று கேட்பார்கள். குருவின் அருள் இருந்தாலே திருமண யோகம் கை கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும்.
குரு பார்க்க கோடி நன்மை
குரு பகவான் தான் நின்ற இடத்தில் இருந்து 5,7,9ஆகிய இடங்களை பார்வையிடுவார். மேஷம் ராசியில் அமரப்போகும் குரு பகவான் அங்கிருந்து 5ஆம் பார்வையாக சிம்மம் ராசியையும், 7ஆம் பார்வையாக துலாம் ராசியையும், 9ஆம் பார்வையாக தனுசு ராசியையும் பார்வையிடுகிறார். குரு பார்வை கிடைக்கும் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான யோகங்கள் தேடி வரப்போகிறது. கவலைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப் போகிறது. குரு பார்வை பட்டாலே நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும். களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கி திருமணம் கை கூடி வரும். நிதி நெருக்கடிகள் நீங்கி பண வரவு அதிகரிக்கும். அதிகம் பணம் புழக்கம் உள்ள இடத்தில் வேலை கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம் கிடைக்கப் போகும் ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும் குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களின் தோஷங்கள் நீங்கி அந்தஸ்து உயரப்போகிறது.
மிதுனம் லாப குருவால் யோகம்
மிதுன ராசிக்காரர்களே.. குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டம சனியால் கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவர்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இட மாற்றங்கள் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் சுப விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியினாலும் குருவின் பார்வையாலும் திருமணம், புத்திரபாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது மகிழ்ச்சியாக இருந்த குரு பெயர்ச்சியை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
சிம்மத்திற்கு கோடீஸ்வர யோகம்
குரு பெயர்ச்சியால் மனதில் இருந்த கவலைகள் மறைப்போகிறது. எண்ணங்களில் தெளிவு பிறக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப் போகிறது. சுப கிரகத்தின் பார்வை பட்டாலே மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் எட்டாம் அதிபதியுமான குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களை பார்வையிடுவதால் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். சிலருக்கு புதிய திருமண வாழ்க்கை கை கூடி வரும். அதிர்ஷ்டமும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். மாணவர்களுக்கு குருவின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக தரிசனம் செய்யப் போகிறீர்கள். இந்த குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வாசல் கதவை வந்து வாய்ப்பு கதவைத் தட்டும் போது நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
துலாம் கல்யாண யோகம்
குரு பகவான் மேஷ ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்வையிடுகிறார். வரம் கேட்கப்போகும் கடவுள் நேரில் வந்தது போல இந்த குரு பெயர்ச்சி அமையப்போகிறது. குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து ஏழாம் பார்வையாக உங்களை பார்வையிடுகிறார். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புகழும் அதிர்ஷ்டமும் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் செயலுக்கு அங்கீகாரம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை தேடி வரும். திருமணத்திற்கு வரன் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த வரனுடன் திருமணம் நடைபெறும். எதிர்ப்புகள் இன்றி காதல் கை கூடி வரும். புதிய காதல் மனதிற்குள் மணியடிக்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்கப் போகிறது. தொழில் ஆரம்பிக்க வங்கிக் கடன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் இல்லத்தரசிகளின் விரும்பம் நிறைவேறும். கோரிக்கைகள் நிறைவேறும். சுபரின் பார்வை உங்களுக்கு கிடைப்பதோடு லாப ஸ்தானத்தின் மீதும், முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுவதால் தொட்டது துலங்கும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமாக கால கட்டம். பதவியும் பட்டமும் தேடி வரப்போகிறது. எதிரிகள் தொழில் ஒழியும் மொத்தத்தில் குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் சந்தோஷம் பொங்குதே என்று பாடப்போகிறீர்கள். உங்களுக்கு தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் கோடிகளை குவிக்கப் போகிறீர்கள்.
தனுசு யோக காலம் வரப்போகுது
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுகிறார். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரப்போகிறது. முன்னோர்களின் ஆசி கிடைக்கப் போகிறது. நிதி நெருக்கடிகள் நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஆசியோடு திருமணம் நடைபெறும். ஏழரை சனியால் அவதிப்பட்டு வந்த நீங்கள் இந்த குரு பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் நிறைய சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உறவுகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். மூத்த சகோதரர்களின் உதவி வீடு தேடி வரும். வண்டி வாகன வசதி வீடு தேடி வரும். குடும்பப் பெண்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும். திருமண யோகம் கைகூடி வரும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு அற்புதமான கால கட்டம். உயர்கல்வி படிக்க யோகம் கைகூடி வரப்போகிறது.
கும்பம் முயற்சிக்கு பலன்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள். புதிய தொழில் தொடங்கலாம் நல்ல லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டது. குருவின் பார்வையால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. வரன் கிடைக்காமல் சிரமப்பட்டவர்களுக்கு குரு பலனால் நல்ல வரன் கிடைக்கும். இந்த ஆண்டு பலர் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கும். குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு வரமாக மழலைச் செல்வம் தேடி வரும். மனதிற்குப் பிடித்தவரை இந்த ஆண்டு நீங்கள் சந்திப்பீர்கள். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். ஏழரை சனியால் பட்ட அவமானங்களுக்கு முடிவு வரப்போகிறது. மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு தேடி வரப்போகிறது.
மீனம் குடும்பத்தில் குதூகலம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசி நாதன் உங்களுக்கு வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். குருபகவானால் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கப்போகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். குடும்ப குரு உங்கள் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த ஊடல்கள் முடியப்போகிறது. காதலர்கள் பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகிறீர்கள். காதல் வாழ்க்கை திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பண வரவு அதிகமாக இருந்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். செலவுகள் வந்தாலும் அதை சேமிப்பாக மாற்றுங்கள். தொழிலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வளர்ச்சி அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப தலைவிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தைத் தரப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் பிரச்சினை தீரப்போகிறது. நோய்கள் நிவர்த்தியாகும். காதல் வாழ்க்கை இனிக்கும். சிலருக்கு புதிய காதல் வரும். ஆயுள் ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் கண்டம் நீங்கும், தடைகள் உடைபடும். நீண்ட நாட்கள் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பதவியில் சிலருக்கு மாற்றம் வரப்போகிறது. வெளிநாடு சென்று வேலை செய்ய முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புகள் தேடி வரும். நிறைய பண வரவையும் மன நிம்மதியையும் தரப்போகிறார் குருபகவான்.