சர்வதேச செவிலியர் தினம் 2020: கொரோனா லாக் டவுனில் செவிலியர்களை கொண்டாடுவோம்
பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதத் தொண்டினை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மதுரை: ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள்'' என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். செவிலியர்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார்கள். கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில் செவிலியர்களின் உன்னத பணியை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200வது பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். 'கை விளக்கேந்திய காரிகை' என்று அனைவராலும் போற்றப்பட்டவர்.
செவிலியர்கள் தினம்.. இன்னுயிரை பணயம் வைத்து கொரோனா பணியில் "பிளோரன்ஸ் நைட்டிங்கேல்களுக்கு" சல்யூட்!
பிரிட்டனில் செல்வச்செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் பிறந்தவர். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். ஏழைகள், இயலாதவர்கள் மீதும் அதிக அக்கறை கொண்டவர் நைட்டிங்கேல். கை விளக்கை ஏந்திக்கொண்டு நள்ளிரவிலும் தொண்டு செய்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.
உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கொள்வதோடு உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை நாம் அனைவரும் பாராட்டுவது மிக அவசியம்.
செவிலியர் ஆகும் அமைப்பு
நர்ஸ் வேலை எல்லாராலும் செய்து விட முடியாது தியாக மனப்பான்மை இருந்தால் மட்டுமே செவிலியர் ஆக வேலை செய்ய முடியும். மருத்துவ துறையில் ஆர்வம் கொண்டவர்களும், மருத்துவமனையில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டுமே செவிலியர் துறை தொடர்பாக படிப்பார்கள். மருத்துவர்கள், நர்ஸ்கள் ஜாதகத்தை பார்த்தால் ஜாதகத்தில் ஆறாம் வீட்டின் அதிபதி வலிமைப் பெற்றிருப்பது தெரியும். ஆறாம் வீடு ருண ரோக சத்ரு ஸ்தானம். இந்த வீட்டு அதிபதி வலிமை பெற்றிருந்தாலோ, சந்திரன் தொடர்பு பெற்றிருந்தாலோ, மருத்துவராகவோ நர்ஸ் ஆகவோ வேலை செய்வார்கள்.
நர்ஸ் வேலை யாருக்கு அமையும்
நோயாளிகளை அணுகும் திறன், ரத்தம், சீழ் என நோயாளிகள் எப்படி இருந்தாலும் அவர்களை தூய்மை செய்து பராமரிக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே நர்ஸ் படிப்பு படித்து வேலைக்கு போக முடியும். ஒருவர் என்ன துறைக்கு படித்து வேலைக்கு போக முடியும் என்பது பத்தாம் இடமான ஜீவன ஸ்தானம் முடிவு செய்கிறது. பத்தாம் வீட்டில் அமரும் கிரகமும் நம்முடைய வேலையை முடிவு செய்கிறது. பத்தாம் வீட்டில் சந்திரன் இருந்தால் மருத்துவமனையில் வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். நர்ஸ் வேலை செய்யும் அமைப்பு வரும்.
வெள்ளை உடை தேவதைகள்
நம்முடைய தொழில், ஜீவனம் எப்படி இருக்கும் என்று நம்முடைய பத்தாம் பாவம் எந்த ராசி என்பதை வைத்து கண்டுபிடிக்கலாம். உங்களின் தொழில் ஜீவன ஸ்தானம் கடகம் ராசியாக இருந்தால் கடல் வணிகள், மீன் வியாபாரம், செவிலியர் பணி, உணவு, உள் அலங்கார வேலை செய்பவராக இருப்பார். காரணம் கடகம் நீர் ராசி, சந்திரன் ஆட்சி செய்யும் இடம், சந்திரனுக்கும் செவிலியர்களுக்கும் தொடர்பு உள்ளது. வெண்மை நிறம் தியாகத்தை குறிக்கும். சந்திரனை குறிக்கும் நிறமான வெள்ளை உடையை நர்ஸ்கள் அணிந்து வெள்ளை உடை தேவதைகளாக வலம் வருகின்றனர்.
ரத்தக்காரகன் செவ்வாய்
அதே போல பத்தாம் இடம், கன்னி, விருச்சிகம் ராசியாக இருந்தால் மருத்துவத்துறை, ரசாயனம், மருந்துகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறைகளில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அதேபோல பத்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தாலும் நர்ஸ், மருத்துவர் தொடர்பான வேலைகளை செய்யலாம். விருச்சிகம் அதிபதி செவ்வாய் ரத்தக்காரகன், கன்னி அதிபதி புதன் நரம்பின் நாயகன், ரத்தமும், நரம்பும் வலிமையாக இருந்தால் மட்டுமே தைரியமாக மருத்துவ துறை தொடர்பான படிப்புகளையும் வேலையையும் தேர்வு செய்ய வைக்கும்.