ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்ரமணியசுவாமி கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை: முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் 5ஆம் படை வீடான திருத்தணி சுப்ரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனை தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானுக்கு உகந்த திருவிழாக்களில் ஆடிக்கிருத்திகை விழாவும் ஒன்று. இன்று ஆடிக்கிருத்திகைநாளாகும். ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகைத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மூலவர் முருகனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். பின்னர் மூல வருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

ஆடிக்கிருத்திகை விழா
ஆடி அசுவினியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று காவடி நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள், செவ்வாடை அணிந்த பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மொட்டை அடித்து முருகனை வழிபட்டனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் காவடி சுமந்து வந்து முருகனை வழிபட்டனர். பெண்கள், குழந்தைகளும் காவடி சுமந்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி செலுத்தினர்.

சிறப்பு அலங்காரத்தில் முருகன்
சனிக்கிழமையன்று ஆடி பரணி விழாவை முன்னிட்டு முருகன், சிறப்பு அலங்காரத்தில் காட்சிக் கொடுத்தார். அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கீரிடம் பச்சைகல் மரகத மாலை, அணிவிக்கப்பட்டிருந்தது.

தெப்பத்தில் அழகன் முருகன்
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஞாயிறு தொடங்கி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்தில் இருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உற்சவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து சென்று சரவணப்பொய்கையில் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தெப்பல் மூன்று முறை சரவணப் பொய்கை குளத்தை சுற்றி வந்தது அப்போது பக்தர்கள் குளத்தின் நான்கு பக்கப் படிகளிலும் அமர்ந்து இருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

அம்பாசமுத்திரம் தெப்ப உற்சவம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோவில் 9ஆம் ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், மஞ்சள், வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications