ஆடிப்பூரம்: தேரில் வலம் வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திரம் கொடுத்த ஸ்ரீரங்கநாதர்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் அணிந்து கொள்வதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீரங்கநாதர் வஸ்திரம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் அவதார தினமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தேரில் வலம் வந்து மக்களுக்கு அருள்புரியும் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.

ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் துளசி நந்தவனத்தில் அவதரித்தவர் ஆண்டாள். ஆண்டாளின் அவதார தினம் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஆண்டாள் ரங்கமன்னாருடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடிப்பூர திருவிழாவின் ஐந்தாம் நாள் ஜூலை 31ஆம் தேதி கருடசேவை நடைபெற்றது. கருட சேவையில் ஆண்டாள் ரங்கமன்னார் அன்ன வாகனத்திலும், ஐந்து பெருமாள்கள் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டாள் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் ரங்கமன்னார் நேற்று காட்சி அளித்தார். இந்த கோலத்தை தரிசனம் செய்தால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் என்பது ஐதீகம். சஷ்டாஷ்டக தோஷம் இருக்கும் தம்பதியரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர்கள் ஆடிப்பூர நாளில் ஆண்டாளை வணங்க தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆண்டாளையும் ரங்கமன்னாரையும் தரிசனம் செய்தனர்.

தேரில் வலம் வரும் ஆண்டாள்

தேரில் வலம் வரும் ஆண்டாள்

ஆடிப்பூரம் தினத்தில் திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதால் இன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்துள்ளனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டாளுக்கு மரியாதை

ஆண்டாளுக்கு மரியாதை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் சித்திரை தேரோட்டநாளில் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும் அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பட்டு மாலை

பட்டு மாலை

இதையொட்டி பட்டு புடவை , மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் ரங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் கோவில் மணியார் ஸ்ரீதர் பட்டு வஸ்திரங்களை யானை மீது வைத்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

ரங்கநாதர் பரிசளித்த பட்டு

ரங்கநாதர் பரிசளித்த பட்டு

பூவுலகில் துளசி மாடத்தில் அவதரித்து தன்னையே நினைத்து தன்னையே மணந்த ஆண்டாளுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர நாளில் பட்டு வஸ்திரம் பரிசளிப்பது சிறப்பம்சமாகும். அந்த வஸ்திரங்கள் இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து ஆடிப்பூர தேரோட்டத்தில் எழுந்தருளி வலம் வருகிறார். தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+