ஐப்பசி பௌர்ணமி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சென்னை: ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலிலும் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்படும். இதனால் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பௌர்ணமிஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
பிரம்மனுக்கு முன்பு 5 தலைகள் இருந்தன. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். இதையடுத்து பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையைக் கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும்போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சை பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.
அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பௌர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.
பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்ன த்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.
தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே ஐப்பசி பௌர்ணமி நாளில் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய சிவன் கோவில்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்படும். தீபாராதனைக்கு பின்னர் அன்னாபிஷேகம் களையப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை வாங்கிசாப்பிட்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை முழுவதும் குறைவில்லாத அன்னம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசியும், 500 கிலோ காய்கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள அண்ணாமலையாருக்கு அன்னா அபிஷேகம் நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசிவிஸ்வநாதர் கோவிலிலும், வடக்குதாமரைகுளம் பெரியபாண்டீஸ்வர உடையநைனார் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையின் காரணமாகவே இன்றைய தினம் ஏராளமானோர் கோவில்களில் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.
தஞ்சையில் உள்ள கொங்கணேஸ்வரர்கோவில், காசி விஸ்வநாதர் கோவில், வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.