ஆருத்ரா தரிசனம் : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஜன.1ல் கொடியேற்றம்
திருநெல்வேலி : புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை சுமார் 6.30 மணியளவில் சுவாமி சன்னதியில் கொடியெற்று வைபவம் நடைபெறும். ஜனவரி 10ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என்று நெல்லையப்பர் கோவிலின் செயல் அலுவலர் நாராயணன் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லை சீமையில் புகழ் பெற்ற சிவாலயம் நெல்லையப்பர் கோவில். இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதோடு, சைவ சமயக்குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம். மேலும், சிவபெருமான் நாட்டியம் ஆடி சிறப்பித்த ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபை இக்கோவிலில் தான் அமையப்பெற்றுள்ளது. இங்கு சிவபெருமான் ஆடும் திருக்கோலம் 'திருத்தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது.

நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில், சிவபெருமான் திருத்தாண்டவம் ஆடியதால், இங்கு ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோவிலில் உள்ள தாமிர சபையில் ஆருத்ரா தரிசனத்தன்று நடைபெறும் திருநடனக்காட்சி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை சுமார் 6.30 மணியளவில் நெல்லையப்பர் சன்னதியில் கொடியேற்று வைபவம் நடைபெறும்.
இது பற்றி கோவில் செயல் அலுவலர் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, திருவாதிரை திருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று காலை 6.30 மணிக்கு நெல்லையப்பர் சுவாமி சன்னதியில் கொடியேற்று விழாவுடன் தொடங்குகிறது.
இத்திருவிழாவின் ஒரு அங்கமாக நெல்லையப்பர் சுவாமி கோவிலில் 2ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பாக, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை, அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.
வரும் ஜனவரி 4ஆம் தேதி இரவு 8 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வைபவம் நடைபெறும்.
ஜனவரி 9ஆம் தேதி யன்று 2ஆம் பிரகாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தாமிர சபையில் இரவு முழுவதும் நடராஜருக்கு திருநீராட்டு வைபவமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.
அதைத் தோடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புகழ்பெற்ற தாமிர சபையின் முன்புள்ள கூத்த பிரான் சன்னதியில் பசு ஒன்று நிறுத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படும். பின்னர் அதிகாலை
4 மணிக்கு நடராஜர் திருநடனக் காட்சியான புகழ்பெற்ற ஆருத்ரா தரிசனம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, ஆருத்ரா தரிசன நிகழ்வை கண்டு தரிசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications