2025 புத்தாண்டில் உதயநிதிக்கு காத்திருக்கும் அந்த ஒரு பிரச்னை – ஜோதிடர் பாலாஜி ஹாசன் தகவல்
சென்னை: 2025 புத்தாண்டு புதிய நம்பிக்கைகளுடன் பிறந்துள்ளது. புத்தாண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி இருக்கிறது என்று பிரபல டிவி சேனல் நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த பதில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் 2025 புத்தாண்டு பலன் குறித்து பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்டனர். அதில் அரசியல், பொருளாதாரம், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தாண்டு எப்படி உள்ளது என்று கேட்டார்.

இதற்கு ஜோதிடர் பாலாஜி ஹாசன் பதில் அளித்தபோது, "உதயநிதிக்கு இந்தாண்டு நன்றாக இருக்கும். புகழ் நிறைய கிடைக்கும். மக்களை நேரில் அதிகம் சந்திப்பார். கட்சியில் இளைஞர்களை அதிகம் அழைத்து வருவதற்கான பணியை மேற்கொள்வார். கட்சி, ஆட்சி இரண்டிலும் அவரின் பங்கு கணிசமாக இருக்கும். இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இருசக்கர வாகன பேரணி போல வித்தியாசமான முயற்சிகளை செய்வார்கள்.
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போல பெரிய செஸ் உள்ளிட்ட விளையாட்டு துறை தொடர்பான பெரிய நிகழ்ச்சியை நடத்துவார்கள். அதன் மூலம் அவரின் புகழ் இந்தியா முழுவதும் பரவும். விளையாட்டுத்துறையில் தமிழகத்தின் புகழ் இந்தியா முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது.
அதேநேரத்தில் அவரின் ஜனன கால கேது மீது சனி பயணிக்கிறது. அதனால் அவர் ஏதாவது திட்டமிட்டாலும் அதை குறிப்பிட்ட காலத்துக்கு முடிக்க முடியாமல் தாமதம் ஆகிக் கொண்டே செல்லும். இயற்கை அல்லது செயற்கை காரணங்களால் காரியங்கள் தள்ளிப் போவதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்த ஒரு வருடம் அவர் டென்ஷனுடன் பரபரப்பாக பணியாற்றக் கூடிய சூழல் தான் அதிகம் இருக்கும். வருடம் முழுவதுமே பெரும்பாலும் பிஸியாகவே பணியாற்றிக் கொண்டிருப்பார். அதனால் இந்தாண்டு எப்படி செல்கிறது என்று தெரியாதளவுக்கு வேகமாக செல்லும்." என்று கூறினார்.
"தற்போது துணை முதலமைச்சராக இருப்பவர் அடுத்து முதலமைச்சர் பதவியை குறிவைத்து பயணிக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதற்கு வாய்ப்புள்ளதா?" என்று தொகுப்பாளர் கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த பாலாஜி ஹாசன், "இதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் தான் சொல்ல முடியும். தேர்தல் தேதி தான் முக்கிய பங்கு வகிக்கும்.
கூட்டணி கட்சிகளின் அமைப்பும் முக்கியம். அரசியல் சூழல்கள், கூட்டணி கணக்குகள், தலைவர்களின் ஜாதகம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் சரியாக கணித்து சொல்ல முடியும். இப்போதுள்ள அமைப்பின் படி கூறினால் தேர்தல் நெருங்கும்போது ஏற்படும் மாற்றங்களால் கணிப்பிலும் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. 2025 டிசம்பர் மாதம், அப்போதுள்ள சூழ்நிலைப்படி என்ன நடக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்." என்றார்.












Click it and Unblock the Notifications