சகோதர சகோதரிகளின் ஒற்றுமையை உணர்த்தும் கருட பஞ்சமி
கருட பஞ்சமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தின் பின்னணியில் சகோதர பாசத்தை உணர்த்தும் கதை ஒன்று உள்ளது.
சென்னை: வட இந்தியாவில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை உணர்த்த ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதைப் போல கருட பஞ்சமி விரதம்
ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு முக்கியமான பண்டிகை. இந்த விரதத்தின் பின்னணியில் பாசமான ஒரு வரலாறு உண்டு.

ஒரு வீட்டில் 7 சகோதரர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தார். பெற்றோர் காலமாகிவிட்டதால், சகோதரர்கள் அந்தத் தங்கையை பாசத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.
வயலில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு அவள் தினமும் மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு செல்வாள். அன்றைய தினம் கருட பஞ்சமி அது அந்த பெண்ணிற்கு தெரியாது. வழக்கம் போல அவள் அன்றும் சாப்பாடு எடுத்துக்கொண்டு போகும்போது மேலே கருடன் ஒன்று ஒரு பாம்பைக் தனது வாயில் கவ்விக்கொண்டு போனது.
கருடன் வாயில் சிக்கித் தவித்த பாம்பு விஷத்தைக் கக்க அது கஞ்சியில் விழுந்தது. அதை அறியாமல், அவள் விஷம் விழுந்த உணவை தன் சகோதரர்களுக்குக் கொடுக்க அவர்கள் அனைவரும் மரணமடைந்து விட்டனர். அதைக் கண்ட அவள் தானும் அதைக் குடித்து உயிர் விட நினைத்தாள்.
அப்போது வயது முதிர்ந்த ஒரு தம்பதியர் அவளைத் தடுத்து நிறுத்தினர். கருட பஞ்சமி விரத மகிமைப் பற்றி கூறி அதை கடைப்பிடிக்கச் செய்து, விரதத்தின் நிறைவில் அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின் வலது காதில் வைக்கச் சொன்னார்கள். அவளும் அப்படியே செய்தாள். சகோதரர்களும் உயிர் பெற்று எழுந்தனர்.
கருடபஞ்சமிக்கு முதல்நாளன்று, நாகசதுர்த்தியன்று நோன்பிருந்து , புற்றுக்கு பால் வார்த்து பின் வீட்டில் 7 முடி போட்ட நோன்புக் கயிறு அணிந்து பூஜை செய்து கணவருக்காக வேண்டிக்கொள்வர். மறுநாளும் புற்றுக்குச் சென்று பால்வார்த்த பின் புற்று மண் எடுத்து வந்து சகோதரரின் வலது காதில் வைப்பார்கள். இதனால் சகோதர ஒற்றுமை உண்டாகும்.
கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் நாகசதுர்த்தி அன்றும், சகோதரர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் தீர்க்காயுளுக்காகவும் கருடபஞ்சமி அன்றும் விரதம் இருந்து பிரார்த்திப்போம். அருகில் இருக்கும் புற்று கோயிலுக்குச் சென்று அங்கு புற்று இருந்தால் அந்தப் புற்றில் பால் வார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். புற்று இல்லாத கோயில்களில் அங்கே பிரதிஷ்டை செய்திருக்கும் நாகர் சிலைகளை வழிபட்டு அருள்பெறலாம்.












Click it and Unblock the Notifications