குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா - தேரோட்டம் கோலாகலம்
குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடந்து வருகிறது. விழாவின் 5ஆம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன்பிறகு முருகன் தேரும், தொடர்ந்து குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய்மொழியம்மை தேர் ஆகியனவும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. காலை 11 மணிக்கு தேரோட்டம் நிறைவு பெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து ஐந்தாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாளை காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16ஆம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
18-ம் தேதி காலை 9 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர்கள் சாத்தையா, செல்வ குமாரி ஆகியோர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications