இன்று சனி அமாவாசை - பித்ரு தர்ப்பணம் செய்தால் பல தலைமுறை சாபங்கள் நீங்கும்
சனிக்கிழமையும் அமாவாசையும் இணைந்து வருவது சிறப்பு முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் இதே போல நாளைய தினம் சூரிய கிரகணமும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
சென்னை: ஆனி மாதம் சனிக்கிழமை அமாவாசை வருவது சிறப்பு. இன்றைய தினம் சனிக்கிழமை அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். சூரிய கிரகணம் நாளில் தர்ப்பணம் முன்னோர்களுக்கு கொடுப்பது நூறு அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். இன்றைய தினம் ஜூன் 20ஆம் தேதி அமாவாசை காலை 11.52 மணிக்கு தொடங்கி நாளை ஜூன் 21ஆம் தேதி காலை 12.10 மணிக்கு முடிவடைகிறது.
அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். இது சாபமாக மாறிவிடும். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. எனவே தான், நாம் பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும்.
கோவில்களுக்கும் நீர் நிலைகளுக்கும் சென்று பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியலையே என்று கவலைப்பட வேண்டாம் வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களை அலங்கரித்து பூக்களை போட்டு விளக்கேற்றி வைத்து சாம்பிராணி புகை காட்டி வணங்கலாம்.
அமாவாசை நாளில் மறக்காமல் முன்னோர்களை நினைத்து வணங்கி நம்மால் முடிந்த அளவு சிலருக்கு உணவு தானமாக கொடுக்க வேண்டும்.
செவ்வாய் பெயர்ச்சி ஜூன் 2020: மீனம் ராசியில் இடம் மாறும் செவ்வாயால் யாருக்கு நன்மை
பித்ரு வழிபாடு
பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் ஆவர்.
முன்னோர்கள் வழிபாடு
கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவனின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.
முன்னோர்கள் பசியை போக்குவோம்
நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது முன்னோர்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். முன்னோர்களின் பசியை போக்க வேண்டியது நமது கடமையாகும்.
சாபங்கள் நீங்கும்
அமாவாசை நாளில் ஏழைகளுக்கு உணவு தானம் கொடுப்பதன் மூலம் நமக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் பித்ரு தோஷங்களும் சாபங்களும் நீங்கும். வீட்டில் சண்டை சச்சரவு நீங்கி அமைதி ஏற்படும். இன்றைய தினம் பசியோடு இருக்கும் சிலருக்கு தயிர்சாதம், அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பசுவிற்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுக்கலாம். காலை மாலை நேரங்களில் வீட்டு பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்ற முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
சனியின் வாகனம் காகம்
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் காகம் வழிபாட்டை தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர். சனி அமாவாசை தினமான இன்று காகத்திற்கு உணவு வைத்து முன்னோர்களின் ஆசியை பெறுவோம்.
கிரகணம் நாளில் தானம் கொடுங்க
சூரிய கிரகணத்தின் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 21ஆம் தேதி ஞாயிறு கிழமை நாளில் கிரகண தர்ப்பணம் மேற்கொள்ள வேண்டும். அந்த நாளில் பித்ருக்களை நினைத்து தானம் செய்ய வேண்டும் இயலாதவர்களுக்கு உணவு தானம் தர வேண்டும். தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.