கணபதியின் உருவம் சொல்லும் சேதி தெரியுமா?
யானை முகம், பானை வயிறு கொண்ட பிள்ளையார் கேட்டதை அருளக்கூடியவர். கணபதி, விநாயகர் என பல பெயர் கொண்ட பிள்ளையாரின் திருவுருவம் மனிதர்களுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத்தரக்கூடியது.
சென்னை: யானை முகமும், பானை வயிறும் கொழு கொழு என இருக்கும் பிள்ளையாரின் உருவம் மனிதர்களுக்கு படிப்பினையை தரக்கூடியது. பிள்ளையாரின் உருவம் செல்லும் சேதி என்ன என்று தெரிந்து கொள்வோம்.
கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். க என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ண என்பது மோட்சம் பெறுவதையும், பதி என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார்.

கணபதி கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார். கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார். விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் விக்னேஷ்வரன்.
யானை தலை
விநாயகருடைய உருவமே விந்தையானது. யானைத் தலையும் பெருவயிறும் மனித உடலும் ஐந்து கரங்களும் கூடிய வடிவமும் உயர்திணை அம்சங்கள் பொருந்திய இந்நிலையை உற்று நோக்கின் விநாயகப் பெருமான் தேவராய், மனிதராய், பூதராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் எல்லாமாய்த் திகழ்கிறார் என்பது புலனாகும். நல்ல விஷயங்களையே சிந்தியுங்கள். நல்லதையே நினையுங்கள் என்று உணர்த்துகிறது விநாயகரின் தலை.

பானை வயிறு
உலகிலுள்ள எல்லா உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுகிறது. ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்து கரத்தான்
படைத்தல் தொழிலையும், அழித்தல் தொழிலையும், காத்தல் தொழிலையும், மறைத்தல் தொழிலையும், மற்றொரு கை அருள்புரிவதையும் குறிக்கிறது.

முறம் போன்ற பெரிய காதுகள்
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
தந்தங்கள்
மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது தந்தத்தையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துகிறது. வியாச பகவானின் மகாபாரதத்தை எழுத்திலே வடித்த முதல் எழுத்தாளன் விநாயகர். ஆகவேதான், எதையும் எழுதுமுன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம் என்பார்கள்.

சிறியகண்கள்,அங்குசம்
எதையும் உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும் என்பதையே சிறிய கண்கள் குறிக்கிறது. ஆசைகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதையே அங்குசம் குறிக்கின்றது.
திருவடி
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

வாழ்வை இனிமையாக வாழ வேண்டும். நமது வாழ்க்கை நம் கையில் உள்ளது. அதை இனிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை மோதகம் உணர்த்துகிறது. இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல் களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்!












Click it and Unblock the Notifications