பிளாஷ்பேக் 2018: பஞ்சாங்கம் கணித்தும் பலிக்காமல் போன வெள்ளம், தீ விபத்து
மழையோ, புயலோ பல மாதங்களுக்குப் பின்னர் நடப்பதை கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கணித்து கூறுகின்றனர். விளம்பி வருட ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெள்ளம், தீ விபத
மதுரை: தாமிரபரணி புஷ்கர வெள்ளத்தில் பலர் பலியாவார்கள் என்று 2018ஆம் ஆண்டு விளம்பி வருட சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணித்திருந்த நிலையில் அது பலிக்காமல் போனது. இதே போல கார்த்திகை தீப திருநாளன்று தீ விபத்து ஏற்படும் என்று கணித்ததும் பலிக்கவில்லை. இதுபோல எதுவும் நடந்து விடக்கூடாது என்று மக்கள் இறைவனை வேண்டியதே காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் வருட பிறப்பு நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். நவ கிரகங்களின் சஞ்சாரம் பிற கிரகங்களுடன் கூட்டணி பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன. கிரகங்களின் ஆதிபத்யம் அடிப்படையிலும் கணித்து கூறப்படுகின்றன.
இந்த விளம்பி வருடம் குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்திருக்கிறார். தனுசு ராசியில் சனி, கடகத்தில் ராகு, மகரத்தில் கேது என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.
வெள்ளத்தில் தத்தளித்த கேரளா
தென்மேற்கு பருவமழை தொடங்கிய உடனேயே ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பெருமழையால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. பெருகிற வெள்ளத்தில் கேரளா சின்னாபின்னமானது. அந்த மாநிலத்தின் மிக முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாமிரபரணி மகாபுஷ்கரம்
இந்த ஆண்டு குருபகவான் விருச்சிகத்தில் சஞ்சரிக்கிறார். தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா 11 நாட்கள் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். பாபநாசம் தொடங்கி முறப்பநாடு வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரம்மாண்டமாக புஷ்கரம் விழா நடைபெற்றது.
பஞ்சாங்கம் கணிப்பு
அக்டோபர் 4 ஆம் தேதி தாமிரபரணியில் புஷ்கர விழாவின் போது பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாவார்கள் என்று பஞ்சாங்கம் கணித்திருந்தது. உயிரிழப்பை தடுப்பதற்காக ஏராளமான முன்னேற்பாடுகளை அரசு செய்திருந்தது. ஆனால் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டது போல பெரிய விபத்து எதுவும் நிகழவில்லை. அதிர்ஷ்டவசமாக இம்முறை பஞ்சாங்கம் கணிப்பு பொய்யாகிவிட்டது.
கார்த்திகையில் தீ விபத்து
கார்த்திகை மாதம் தேவாலயங்களில் தீ விபத்து ஏற்படும், கார்த்திகை தீபத்தின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. அதே போல இதய நோய்கள் அதிகம் ஏற்படும் என்றும் வட நாட்டில் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்திருந்தது. ஆனால் அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதுவும் மக்கள் செய்த அதிஷ்டம்தான்.
மக்களுக்கான எச்சரிக்கை
பஞ்சாங்கம் என்பது இதுபோல நடக்க வாய்ப்பு உள்ளது என்று மக்களை எச்சரிக்கவே, அச்சுறுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. முன்னெச்சரிக்கையாக இருந்து கொண்டால் விபத்துகள் ஏற்படாமல் தப்பிக்கலாம் என்பதற்காகவே பஞ்சாங்கம் கணித்து எழுதப்படுகிறது.