ஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் (மேஷம் முதல் கடகம் வரை)

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹேவிளம்பி வருடத்தில் பன்னிரெண்டு இலக்கினம்/இராசி அன்பர்களுக்கும் நல்லவையே நடக்க இனிய ஹேவிளம்பி வருட இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசி காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி வருடம்14-04-2017 அதிகாலை பங்குனி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 - 04 மணிக்கு மகர இலக்னம் துலா இராசி விசாக நட்சத்திரத்தில் பிறக்கிறது.

Hevilambi Tamil New year Rasi Palangal Mesham to Kadagam

பொதுவாக ஹேவிளம்பி வருடத்தில் மழை அதிகம் இருக்காது. மழை மிதமாகவே இருக்கும். எனினும் பொருட்களின் விலை குறைவாகவே இருக்கும். மலர்கள் குறைவாகவே விளையும். போர்களால் நாடுகள் அழிந்து மக்கள் பலர் மரணம் எய்துவர்.

பொது பலன்கள்

நாட்டின், மக்களின் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். மக்களுக்குத் தேவையான அனைத்து முக்கியப் பொருட்களும் ஓரளவே கிடைக்கும். விலைவாசியும் ஏற்ற இறக்கமாக இருக்கும். நாட்டின்எல்லைப் பகுதியில் போர் மேகங்கள் சூழலாம். ஆனாலும், போர்களில் வெற்றி கிடைத்து, நியாயமான ஆட்சி ஏற்படும் . மிகுந்த காற்று வீசி அழிவுகள் வரலாம்.மக்களின் ஆரோக்கியம் குறைந்து நோய்நொடிகள் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.

அரசியல்வாதிகளுக்கு ஒருவித பயவுணர்வும், பெண்களுக்குத் தீமைகளும்ஏற்படும். வெப்ப சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். மக்களிடம் பக்தி மார்க்கஈடுபாடு அதிகரிக்கும். நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருகும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான வருடம் ஆகும். திரைப்பட இணைத் தொழில்கள் ஏற்றமும், சிறப்பும் பெறும். துவர்பான பயிர்கள், புன்சைப் பயிர்களும் செழிக்கும்.

கிழங்கு வகைகள், கருப்பு தானியங்கள் விளைச்சல் அதிகரிக்கும். நாட்டின் சில பகுதிகளில் வறட்சி நிலவும். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். அதிகரிக்கும். இறக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும். கல்வித்துறையில் முன்னேற்றங்களும், கல்வியாளர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.

ஹேவிளம்பி வருடத்தின் முக்கிய கிரக பெயர்ச்சிகள்

ராகு-கேது:

இந்த ஆண்டு திருக் கணிதப் பஞ்சாங்கப்படி 18 - 08 - 2017 அதிகாலை ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 - 34 மணி அளவில் இராகு சிம்ம இராசியில் இருந்து கடகம் ராசிக்கும், கேது கும்ப இராசியில் இருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

குரு பெயர்ச்சி:

இந்த ஆண்டு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12 - 09 - 2017 ஆவணி மாதம் 27 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை சுமார் 06 - 50 மணி அளவில் குரு பகவான் கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

சனி:

சனிபகவான் 21 - 06 - 2017 அன்று தனுசு இராசியில் இருந்து வக்கிரம் ஆகி விருச்சிக இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். பின்னர் 26 - 10 - 2017 அன்று நேர்கதியில் மீண்டும் தனுசு ராசிக்கு, சனி பெயர்ச்சி ஆகிறார்.

மேஷம்:
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்-பரணி-1, 2, 3, 4 பாதங்கள்-கார்த்திகை-1,2,3,4பாதங்கள்)

தைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

சூரியன் - தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உங்கள் புகழ் ஒளி பரவும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறைமூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலைகிடைக்கும். மாதத்தில் தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத லாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து
அரசாங்கத்தின் பட்டம் கௌரவம் பெறுவீர்கள்.

செவ்வாய் - ஆனி மாதத்தில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கையும் ஏற்படும். உடன்பிறப்புக்குஇடையே ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை போன்ற புதியசொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில்புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும்.

புதன் - பலவகையிலும் தனவரவுகள் அதிகரிக்கும்.மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும்,செலவும் அதிகரிக்கும். மக்கள்மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவைகளும் ஏற்படும்.

சுக்கிரன் - தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரசாதனங்கள்அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். சுற்றுலா, புனித யாத்திரைகள்போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும்அமையும். நெருங்கிய உறவினர் வகையில் சுப காரியங்கள் நடக்கும்.

குரு - ஆவணி 27 இல் 7 ஆம் இடத்திற்கு மாறும் குருவால் வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புதியதொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசுவேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக்கிரையம் செய்யலாம். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.

சனி - ஹேவிளம்பி வருடத்தில் தங்கள் இராசிக்கு சனி பகவான் நன்மை அளிக்கவில்லை என்றாலும், பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும்.

ராகு:ஆண்டின் முற்பகுதியில் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும் பிற்பகுதியில் சொந்த வீடு கட்டி குடிபோவீர்கள்.

கேது: ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிற்பகுதியில் தொழில் நிலை சிறப்படையும்.

கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட தீமைகள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும்.

ரிஷபம்:

( கார்த்திகை -2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)

களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம்.

சூரியன்: பணம் காசு சேர்ந்து செல்வ நிலை உயரும்.நினைத்த காரியங்கள் நினைத்தபடி தடையின்றி நிறைவேறும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. புத்திரபாக்கியம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். நோயற்ற வாழ்வு மலரும். ஞானம் மேலிடும். மாசி மாதத்தில் தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படும்.புதிய உயர்ரக வாகன சுகங்கள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் அரசியல்பிரபலங்களின் ஆதரவு கிட்டும். பொது ஜன சேவைகளால் மதிப்பு மரியாதைகூடும். புகழும் ஓங்கும்.

செவ்வாய் ; அரசுத்துறையால் இலாபம் ஏற்படும். வீட்டில் பயிர், மனை,பால் மாடுகள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் பெருகும். நவீன வீட்டுஉபயோக சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதாவது ஒரு வகையில் ஆண்டு முழுவதும் பணம் வந்து கொண்டே இருக்கும். நவநாகரிக ஆடை அணிகலன்கள் சேரும்.

புதன்: தனதான்ய விருத்தியும், உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் அதிகம்முன்னேற்றம் ஏற்படும். நிம்மதியும் சுகமும் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி அடைவீர்கள்.பயணங்களால் இலாபம் ஏற்படும். வங்கி, கணக்கு போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும்.

சுக்கிரன்: மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆண்டு முழுவதும் பொன்பொருள்சேரும். ஆடை, அலங்காரப் பொருட்கள் மற்றும் சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் ஆகிய எல்லாமே ஒரு சேரக் கிடைக்கும். கோவில்களில் ஏழைஎளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு இறையருளால் வசதிவாய்ப்புக்கள் பெருகும்.

குரு - ஆவணி 27 க்கு முன் புத்திர பாவத்திலும், பின்னர் ருண பாவத்திலும் சஞ்சரிக்கும் குரு, முற்பகுதி வரையிலான காலத்தில் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழவைப்பார். செல்வந்தர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். அரசாங்க உத்தியோகம் ஏற்படும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். பிற்பகுதியில் ஆரோக்கியக் குறைவைத் தந்தாலும் அதற்குப் பிறகு தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்களைத் தரலாம். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும்.

சனி: அஷ்டமச்சனி காலத்தில் அந்தஸ்து, பதவி, கௌரவம் ஆகியவைக்கு பங்கம் ஏற்படலாம். வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும். சிலருக்கு வெளி நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அட்டமச் சனியாக இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரைவணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும்.
திருநள்ளாறு சென்றுவரவும் தீமைகள் குறையும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் புது வீடு கட்டி குடி போவீர்கள் பிற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும்.
கேது: ஆண்டு முழுவதும் தொழில் முன்னேற்றம் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: (மிருகசிரீடம்-3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3பாதங்கள்)
கல்விக்காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.
சூரியன்: தானதருமங்கள் செய்யும் அளவுக்குச் செல்வநிலை உயரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என பாடும் நிலைக்கு உயர்வீர்கள். எனவே, எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கி முன்னேற்றம் காணலாம். அரசுத் துறையால் இலாபம்அல்லது அரசில் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படலாம். மாதத்தில்பணம் காசு சேரும். எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைப் புரிவார்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சித்திரை மாதத்தில் சிறந்த வாகனயோகம்ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்.

செவ்வாய்: சுப பலன்களைஎதிர்பார்க்கலாம். சகோதரரால் நன்மைகள் ஏற்படும். எதையும் செய்துமுடிக்கும் துணிச்சல் உண்டாகும். சிலருக்கு வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சின்னவிஷயங்களுக்காக அதிகக் கோபம் கொண்டால் டென்ஷனால் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

புதன்: சுபபலன்களைத் தருகிறார். பலவகையான யோகங்கள் ஏற்பட்டு ஜாதகர் அரசனுக்கு நிகராக வாழ்வார். சேவை செய்ய பணியாட்கள்,பணிப்பெண்கள் அமைவர். சந்ததி விருத்தி ஏற்படும். பூமி, மனை, வீடுகள் ஆகியவற்றால் இலாபம் ஏற்படும். பங்குச் சந்தையில் அதிக இலாபங்களை எதிர் பார்க்கலாம். அரசு வேலை கிடைக்கலாம்.

சுக்கிரன்: சுப பலன்களைக் கொடுக்க வல்லவர் சுக்கிரன். ஆரம்பத்தில் உயர்ந்த செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். முகத்தில் அறிவுச் சுடரொளி வீசும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். நல்ல குழந்தை பிறக்கும்.மனைவிக்கு வயதானாலும் எழில் நிறைந்தவராக இருப்பார். நல்ல குரு அமைவார். அவரால் வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் பெருகும்.

குரு: ஆவணி 27 இல் துலாத்துக்கு மாறும் தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் புத்திர பாவமேறி, வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். வாக்கு வன்மைஅதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும்ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சனி: இந்த வருடம் கண்டச் சனியாகி குறிக் கோளற்ற பயணங்களைத் தரும். சிலருக்கு வெளிநாட்டு வாசம் ஏற்படும். ஆடியில் ருண பாவம் அமர்ந்துசுப பலனைத் தருகிறார். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாகநடக்கும். பதவி உயர்வு, வேலையற்றவர்களுக்கு வேலை கிடைத்தல், சுவை மிக்க இராஜ உணவு கிடைத்தல். என இராஜபோக வாழ்க்கை அமையும். இதுநாள் வரை இருந்து வந்த இக்கட்டான நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் பொன்னும் பொருளும் சேரும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருக்கும் பிற்பகுதியில் பண வரவுஃப் அதிகரிக்கும்.
கேது: ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும் பிற்பகுதியில் போக்குவரத்தில் கவனம் தேவை.

கடகம்:

(புனர்பூசம்-4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம்.
சூரியன்: விருப்பமானவர்களுடன் உறவு ஏற்படும். தமக்குப் பிடித்தமான இடத்துக்கு வேலைமாற்றம் ஏற்படும். விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி, அரசுத்துறையில் இலாபம் ஏற்படும். மிக்க சுகம் உண்டாகும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமயமான நல்ல திருப்பங்கள்ஏற்படும். பிறர் மேல் இரக்கம் கொள்வார். சுபகாரியங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்கும்.

செவ்வாய்: சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும்.சிலருக்கு சில மாதங்களில் உறவினர் பகையும், வீட்டில் குழப்பமும்உண்டாகலாம். புதிய ஆடை சேர்க்கை, தானியவிருத்தி, பின்னர் வரும்காலத்தில் கீழான மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். உடலில் ஒளியும்,அழகும், பொலிவும் கூடும். சொல் வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்.மனைவி மூலம் பூர்ண
சுகம் கிடைக்கும்.

புதன்: பொதுவாக சுப பலனைத் தருவார். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும. வழக்குகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். சிலர்பிறருக்குப் பிணையாக நிற்கப் போய் அவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்க நேரலாம். எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள்ஏற்படலாம்.

சுக்கிரன்: வருடத்தின் துவக்கத்தில் சுக்கிரனின் அசுப பலன்களை உணர்வீர்கள். வயிற்று உபாதைகள் ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பின்னர், எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும். உயர்ந்த செல்வநிலையும் அடைவர். பின் வரும் மாதங்களில் மனைவியிடம் அன்புஉடையவராக இருப்பர். மந்திரி போன்ற உயர்
பதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மோசடி காரணமாக நஷ்டங்கள் ஏற்படலாம்.

குரு: ஆவணி 27 ஆம் தேதியன்ற சுக பாவமான துலாத்திற்கு மாறும்குரு மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரச்செய்வார். புதிய வீடு, வாகனம் வந்து சேர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சிஉண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும்.அரசு மூலம்வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர்பதவிகளை அடைவர்.

சனி - ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறும் சனியால், எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணியில் உத்தியோக உயர்வுகளை எதிர்பார்க்கலாம். ஆடி முதல் கார்த்திகை மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் உங்களுக்கு இராஜயோகம்தான், இம் மாதங்களில் மட்டும் முன்னோர் சொத்துக்களில் இருந்து வந்தபிரச்சனைகள் மத்தியஸ்தம் மூலமாக சுமுகமாக முடியும். அரசு அதிகாரிகள்தாங்கமுடியாத கெடுபிடிகள்செய்வர். சனி பகவானின் சன்னதிக்குச் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடுதலும், ஒருமுறை திருநள்ளாறு சென்று வருதலும்
நலம்பயக்கும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் பண வரவு அதிகமாக இருக்கும் பிற்பகுதில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்
கேது: ஆண்டின் முற்பகுதியில் பலவிதமான அவமானங்களை தருவார் பிற்பகுதியில் அனைவருடனும் நல்லுறவு உண்டாகும்.

சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலும், தனுசு முதல் மீனம் வரையிலும் புத்தாண்டு ராசி பலன்கள் வெளியாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+