இரட்டை திருப்பதி- தேவர்பிரான் திருக்கோவில் (ராகு)
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவதிருப்பதிகளில் ஒன்றான இரட்டை திருப்பதிகள் என்று அழைக்கப்படும் அருள்மிகு தேவர்பிரான் திருக்கோயில் ஆகும்.
இத்திருக்கோயில் நவ திருப்பதிகளில் ஐந்தாவது தலமாகும் நவகிரகங்களில் ராகு தலமாகவும் அமைந்துள்ளது. இத்திருத்தலம் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஆறாவது திவ்ய தேசமாக அமைந்துள்ளது.
இரண்டு கோவில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாக சொல்லப்படுகிறது. எனவே இதை இரட்டை திருப்பதி என்கிறார்கள். இந்த தலம் ஆழ்வார் திருநகரிக்கு கிழக்கு திசையில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தாமிரபரணி நதிக்கரையில் முதல் கோவில் இருக்கிறது. மூலவர், தேவப்பிரான் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.

புராணச் சிறப்பு:
சுப்ரபர் என்ற முனிவர் ஒரு யாகம் இயற்றுவதற்காக பூமியை உழுது பண்படுத்தினார். அப்பொழுது நிலத்திலிருந்து ஒரு தராசும் வில்லும் கிடைத்தது. தராசு ஒரு பெண்ணாகவும் வில் ஒரு ஆணாகவும் மாறி தங்கள் சாபத்திலிருந்து விடுபட்டு முக்தியடைந்தனர்.
இத்திருத்தலத்தில் துலையும் (தராசும்) வில்லும் முக்தியடைந்ததால் இத்தலம் துலாவில்லிமங்கலம் எனப் பெயர் பெற்றது. தற்போது மருவி தொலாவில்லி மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
இலக்கியச் சிறப்பு:
இத்திருத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது (ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி பதினொன்றாம் பாட்டு)
தனிச் சிறப்பு:
இத்திருக்கோயில் நவ திருப்பதிகளில் ஐந்தாவது தலமாகும். இத்திருத்தலம் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்தி ஆறாவது திவ்ய தேசமாக அமைந்துள்ளது. நவகிரகங்களில் ராகு தலமாகவும் அமைந்துள்ளது.
ராகு தோஷம்
நவகிரகங்களில் ராகு தலமாக அமைந்துள்ளதால் ஜாதகத்தில் ராகு தோஷம் உள்ளவர்கள், காலசர்ப்ப யோகம் உள்ளவர்கள், திருமணம், புத்திரபாக்கியம் போன்றவற்றில் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் ராகுவின் பாதிப்பு குறைந்து வாழ்க்கையில் தாங்கள் விரும்புவதை அடைந்து சுகம் பெறலாம்.
பணம், சொத்து, பொருள், நிதி, தடைகள் நீங்கி கிடைக்கவும், வியாதிகள் தொல்லைப்படுத்தாமல் ஒதுங்கி செல்லவும், பிரார்த்தனைகள் ஜெயிக்கவும் இரட்டை திருப்பதி என்னும் இந்த தலத்திற்கு வந்து என்னென்ன பிரார்த்தனைகளை முறைப்படி செய்ய வேண்டுமோ அதை செய்தால் புனிதனாக மாறி நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.

இத்திருத்தலத்தின் விமானம் குமுத விமானம், பிரம்மன் கிழக்கே திருமுக மண்டலம் வீற்றிருந்த திருக்கோலம்.
அமைவிடம்:
திருவைகுண்டத்திலிருந்து பெருங்குளம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆழ்வார்திருநகரி மற்றும் திருவைகுண்டத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன்: அருள்மிகு தேவர்பிரான் (ஸ்ரீநிவாசன்)
இறைவியர்: அருள்மிகு ஸ்ரீதேவி அருள்மிகு பூதேவி
தீர்த்தம்: வருண தீர்த்தம் (தாமிரபரணி)
தல விருட்சம்: விளாமரம்
ஆகமம்: வைகாநச ஆகமம்
விமானம்: குமுத விமானம்












Click it and Unblock the Notifications