கார்த்திகை அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 9 மாதங்களுக்கு பிறகு நீராட அனுமதி வழங்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
ராமேஸ்வரம்: கார்த்திகை மாதம் கடைசி திங்கட்கிழமை சோமவார அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். 22 தீர்த்தங்களில் புனித நீராட தடை நீடிப்பதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தீர்த்த கிணறுகளில் நீராட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டாலும் அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடித்து வந்தது. ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை காலங்களில் புனித நீராடவும் தர்ப்பணம் அளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
கார்த்திகை மாத சோமவார அமாவாசை தினத்தையொட்டி 9 மாதங்களுக்கு பிறகு இன்று அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடவும், பூஜை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இதனை அடுத்து, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் வழிபாடு செய்தனர்.
அக்னி தீர்த்தக்கடலில் நீராடினாலும் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை நீடிப்பதால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோயிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications