குலசேகரபட்டிணம் தசரா திருவிழா தொடங்கியது - பக்தர்கள் காப்புகட்டி வேடமணிந்தனர்
உலக பிரசித்த பெற்ற குலசேகரபட்டிணம் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19ஆம் தேதி விஜயதசமி நாளில் மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.
தூத்துக்குடி: குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
குலசை, என்று சுருக்கமாக அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் ஊராட்சி, தமிழகத்தில், தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்துள்ளது. இங்குள்ள ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் பழம் பெருமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசையில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து வந்து முத்தாரம்மனை வழிபடுவார்கள்.
குலசை தசராவின் சிறப்பே ஜாதி, ஏழை, பணக்காரன் என்ற எந்த ஏற்றத்தாழ்வும் பார்க்கப்படுவதில்லை. இதுவே இந்த விழா உலக அளவுக்கு புகழடைய காரணம். பக்தர்கள் நேர்த்தி கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர்களில் காணிக்கை பெற்று, அதை தசராவின் 10வது நாளான விஜயதசமியன்று, முத்தாரம்மன் கோயிலில் வந்து சமர்ப்பிப்பதுதான்.
[ தசரா கோலாகலம்.. மைசூரில் சுதா மூர்த்தி துவக்கி வைத்தார்.. குலசை விழாவில் கடம்பூர் ராஜு பங்கேற்பு ]

முத்துக்களை குணமாக்குபவள்
தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து, அதை ஆபரணங்களாக்கி, பாண்டிய மன்னர்கள், அன்னைக்கு சூட்டி அழகு பார்த்ததால், அம்பிகை முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாகவும், உடலில் ஏற்படும் அம்மை முத்துக்களை, தன்னை வேண்டி வழிபட்டால் உடனே குணமாக்குபவள் என்பதால் முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாகவும், இருவேறு வகைகளில் அம்பாளின் பெயர் காரணத்தை கூறுவர். பராசக்தியின் வியர்வை முத்துக்களில் இருந்து உருவான அஷ்டகாளிகளில் மூத்தவள் என்பதால், அம்பிகை, முத்தாரம்மன் என்று பெயர் சூட்டி அழைக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுவர்.

குலசை தசரா விழா
முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

வேடமணியும் பக்தர்கள்
நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு கட்டினர்.
காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறையில் தங்கி விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு அணிவித்தனர். காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூல் செய்து 10ம் நாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.

அம்மனுக்கு நேர்த்திக்கடன்
காளி, சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், அனுமார், சுடலை மாடன், ராஜா, போலீஸ், பெண் என பல நூறு வேஷங்களை தத்ரூபமாக தரித்தபடி, பக்தர்கள் காணிக்க சேகரிப்பார்கள். வேடம் அணிந்து காணிக்கை எடுத்து வந்து உனது காலடியில் சமர்ப்பிக்கிறேன் என்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டால், தீராத வினைகளும் தீருவதாக ஐதீகம். இதனால்தான் அத்தனை லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் காணிக்கை செலுத்த வேடமணிந்தபடி கோயிலுக்கு வருவதால் விஜயதசமி நாளன்று, குலசேகரன்பட்டினமே பக்தி வெள்ளத்தால் மிதக்கிறது.

காளிக்கே முதலிடம்
வேடம் அணிபவர்களில் காளி வேடம் அணிவோர்தான் தலைமையாக கருதப்படுவார்கள். இது அம்பிகைக்கான திருவிழா என்பதால் காளிக்கே அங்கு அதிக முக்கியத்துவம். நீண்ட சடை முடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுக்க செந்நிற வர்ண பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வர்ண பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான பிரத்யே ஆடைகள், வாயில் கோரப்பல் என காளி வேடத்தை தினமும் பூணுவதற்கே பொறுமை மிகவும் அவசியம்.

ஏழை,பணக்காரன் என்ற பேதமில்லை
பல வித வேடமணிந்து காணிக்கை சேகரிப்பதில் ஒரு அர்த்தம் உள்ளது. உயர்ஜாதி என்று எண்ணிக்கொள்வோராக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும், வேடம் அணிந்த பிறகு, ஏழை வீட்டிலும், பிற ஜாதியினர் வீட்டிலும், பிற மதத்தவர்கள் வீட்டிலும் போய் நின்று "முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க.. என்று சொல்லி காணிக்கை சேகரிக்கின்றனர்.

உலா வரும் அம்மன்
இன்று தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2ஆம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3ஆம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4ஆம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார் அம்மன்.

விஜயதசமியில் சம்ஹாரம்
10ஆம் நாளான வருகிற 19ஆம் தேதி இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. விஜயதசமி நாளின் நள்ளிரவில், வங்கக்கடலோரம், நடைபெறும் மகிஷாசூரசம்ஹார விழாவில், அம்பிகை மகிஷனை வதம் செய்ததும் தசரா விழா இனிதே நிறைவு பெறும். காப்புகட்டி வேடமணிந்த பக்தர்கள், அம்பிகையை தரிசனம் செய்த நிறைவோடு, அதன்பிறகு காப்பை கழற்றி விரதத்தை நிறைவு செய்வார்கள்.












Click it and Unblock the Notifications