Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்திரை திருவிழா: பட்டத்தரசி மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் - செங்கோல் ஏந்திய அழகை பார்க்க வாங்க

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு வரும் செவ்வாய்க்கிழமை பட்டாபிஷேகம் நடக்கிறது. அது முதல் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்குகிறது என்பது ஐதீகம்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். வைரக்கீரிடம் சூடி வேப்பம்பூ மாலை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி கம்பீரமாக அருளாசி தரும் மீனாட்சி அம்மனை கண் குளிர தரிசிக்கலாம்.

சித்திரை மாதத்தில் மதுரையில் மீனாட்சி ஆட்சி தொடங்கி விடும். முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான். உங்கள் வீட்டில் மீனாட்சியா? அல்லது சிதம்பரமா?' எனக் கேட்பதும் உண்டு. மதுரையில் இன்றும் வழிபாட்டில் மீனாட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பக்தர்கள் முதலில் மீனாட்சியை தரிசித்துவிட்டு, பின்னரே சுந்தரேசுவரரை வழிபடுகின்றனர்.

விழாவின் ஒன்பதாம் நாள் புதன்கிழமை திக் விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா

முன்பெல்லாம் மாசி முதல் ஆடி மாதம் வரை ஆறு மாதம் அம்பாளின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார். திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. நான்கு மாதங்கள் மட்டுமே அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.

 மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழா கடந்த வாரம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் இணைந்து மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். எட்டாம் நாளான செவ்வாய்கிழமை காலை ஊடல் லீலை நடக்கிறது. அன்றிரவு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

 செங்கோல் ஏந்தும் மீனாட்சி

செங்கோல் ஏந்தும் மீனாட்சி

மீனாட்சி அம்மனுக்கு பட்டத்து அரசியாக முடி சூட்டுவதற்காக ராயர் கிரீடம் எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டப்பட்டு கையில் செங்கோல் தரப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும்.

பட்டத்தரசியாக பவனிவரும் மீனாட்சி

பட்டத்தரசியாக பவனிவரும் மீனாட்சி

இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இரவு வெள்ளி சிம்மாசனத்தில் பவனி வரும் பட்டத்தரசியைக் காண விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலமாசி, வடக்கு மாசி வீதிகளில் கூட்டம் குவிந்திருக்கும்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ஒன்பதாம் நாளான நாளை அம்மனின் திக்விஜயம். இந்திர விமானத்தில் ஊர்வலம் வரும் அம்மன் அஷ்ட திக்பாலர்களுடன் சண்டை போடுவது போல் நடக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமானது. சித்திரை திருவிழாவின் உச்சமாக மீனாட்சி அம்மனுக்கு சுந்தரரேஸ்வரருடன் திருக்கல்யாணம். இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி நடக்கிறது. புத்தம் புது புடவை கட்டி கழுத்து நிறைய நகை போட்டு தங்கள் வீட்டு திருமணத்திற்கு கிளம்புவது போல பெண்கள் கோவிலுக்கு வந்து புது தாலி மாற்றிக்கொள்வார்கள். திருமண விருந்து தடபுடலாக நடைபெறும். திருப்தியாக அறுசுவை உணவுகளை சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் செல்வார்கள் பக்தர்கள்.

 பல்லக்கில் பவனி வரும் மீனாட்சி

பல்லக்கில் பவனி வரும் மீனாட்சி

திருக்கல்யாணத்தன்று மாலை பூப்பல்லக்கில் பவனி வரும் அம்மை அப்பனை காண்பதற்காகவே மாலை முதலே வீதிகளில் கூட்டம் குவியும். முதலில் யானை, ஒட்டகம் என்று ஒவ்வொன்றாகப் பவனி வர, விநாயகர், முருகனைத் தொடர்ந்து மல்லிகை, ரோஜா, மனோரஞ்சித, பன்னீர்ப் பூக்கள் வாசம் வர மணக்க தம்பதி சமேதரராய்ப் மீனாட்சி சொக்கநாதர் பூப்பல்லகில் எழுந்தருளுவார்கள்.

சித்திரை தேரோட்டம்

சித்திரை தேரோட்டம்

15ஆம் தேதியன்று தேரோட்டம் நடக்கிறது. அதிகாலையில் மக்கள் கூட்டம் அம்மன் திருத்தேரில் ஊர்வலம் வருவதைக் காண மதுரை சுற்றுவட்டார கிராம மக்கள் மாட வீதிகளில் குவிந்திருப்பார்கள். அதிர்வேட்டு சத்தம் விண்ணை பிளக்க, செண்டை மேளச் சத்தத்துடன், நாதஸ்வரம் மேளதாளம் முழங்க ஆடி அசைந்து வரும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரினை பக்தி பரவசத்துடன் இழுத்துச் செல்வார்கள். தம்பதி சமேதரராக தேரில் வலம் வரும் காட்சியை காண்பதே தனி சுகம். மதுரை நகர வீதிகளில் பக்தர்களுக்காக அனைத்து மதத்தினரும் நீர் மோர், பானகம், அன்னதானம் அளிப்பார்கள். அனைத்தையும் சாப்பிட்டு விட்டு பக்தர்கள் திருப்தியாக வீடு திரும்புவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+