மகா சிவராத்திரி: ராமேஸ்வரம் கோவில் நாளை முழுவதும் திறந்திருக்கும் - வெள்ளிக்கிழமை தேரோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை வியாழக்கிழமை மகா சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை வியாழக்கிழமை பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு வெள்ளித்தேரோட்டமும் வெள்ளிக்கிழமையன்று மகா தேரோட்டமும் நடைபெற உள்ளது.
ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 5வது நாளன்று சுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் ஆறாவது நாளன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 வது நாளான இன்று மாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை வியாழக்கிழமை மகா சிவராத்திரி அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பட்டு நாள் முழுவதும் நடை திறந்திருக்கும். நாளை இரவு 9 மணிக்கு வெள்ளித்தேரோட்டம் நடைபெறும். சுவாமி அம்பாள் வெள்ளித்தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேச ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் 12ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.