ஸ்ரீகாளஹஸ்தி,ஸ்ரீசைவம் ஆலயங்களில் மகா சிவராத்திரி விழா - குவியும் பக்தர்கள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளத்தீஸ்வரர் ஆலயம் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி : மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மகா பக்தர்களுக்கு கூடுதல் தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்திப்பெற்றது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பூஜையும் செய்யப்படுகிறது.
இக்கோயிலில் ஐந்தறிவு படைத்த ஜீவன்களான ஸ்ரீ சிலந்தி, காள பாம்பு, அஸ்தி யானை ஆகிய மூன்றும் பூஜித்த தலம் என்பதால் ஸ்ரீகாளஹஸ்தி என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வருடாந்திர பிரமோற்சவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணப்பர் கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடந்தது.
சிவனின் பஞ்சதலங்கள்
பிரமோற்சவத்தின் முக்கிய அம்சமாக வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளத்தீஸ்வரரும், ஞானபிரசூனாம்பிகை தாயாரும் அலங்கரிக்கப்பட்டு கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் பங்கேற்பு
சுவாமி வீதி உலாவில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்தும் கோலாட்டம் ஆடியபடியும் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாலை சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீகாளத்தீஸ்வரர் தங்க கொடிமரத்துக்கு பால், இளநீர், தயிர் உட்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தியில் கொடியேற்றம்
தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளான ஸ்ரீகாளத்தீஸ்வரர், ஞானப்பிரசூனாம்பிகை தாயார், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, பக்தகண்ணப்பர், சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்று முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தியில் குவியும் பக்தர்கள்
சிவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹத்தி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழா
சிவ மகா புராணத்தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்தி தேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். இத்தலத்தைப் திருப்பருப்பதம் என்றும் மல்லிகார் ஜூனம் என்றும் கூறுவர். இது 12 ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்று. சிவராத்திரியன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்றும் இன்பம் அடையலாம். இங்கும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.