மன்மத ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் குரு!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
வைராக்கியம் திட சிந்தனை, பொன் மனம் நேர்மை நல்லொழுக்கம் உடையவர்களே, தங்கள் நாக்கால் பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ளும் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மை குறைந்தவர்கள். ஊருக்கு உபகாரத்தை செய்யும் நீங்கள் தன் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் ஆவீர்கள். வாக்கு, கல்வி சாதுர்யங்கள் கொண்ட நீங்கள் சமயத்தில் உண்மைக்குப் புறம்பான பேச்சால் உங்கள் கௌரவத்தை கெடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் ஆன்மீக செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபடுவீர்கள்.

குருவின் பார்வை
இந்த ஆண்டு குரு பகவான் எட்டாம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. பொதுவாக மன வேதனையும் நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருளாதாரச்சரிவை ஏற்படுத்துவார். வீன் விரோதத்தை உருவாக்குவார். இந்த நிலை ஜூலை துவக்கம் வரை மட்டும் தான் மேலும் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது ஏழாம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும், அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும்.
சனியின் இருப்பிடம்
இப்போது சனி பகவானும் பன்னிரெண்டாம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். அவரால் நற்பலனை எதிர் பார்க்க முடியாது. பொருளாதார இழப்பு வரலாம். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும் எதிரிகளின் இடையூறுகள் அவ்வப்போது வரலாம். இதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனியின் ஏழாம் இடத்துப் பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார் உங்கள் ஆற்றல் மேம்படும்.
ராகுவினால் தொல்லை
நிழல் கிரகமான ராகு தற்போது பத்தாம் இடமான கன்னியில் இருக்கிறார். அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம் இன்னொரு கிரகமான கேது தற்போது நாலாம் இடமான மீனத்தில் உள்ளார். அங்கு அவர் உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளைத் தரலாம்.
குரு பெயர்ச்சியால் நன்மை
செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும் மதிப்பு மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண் விரோதத்தை தவிர்க்கவும். ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் குருபகவான் சிம்மத்திற்கு மாறுகிறார். குரு பெயர்ச்சிக்குப் பிறகு எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம், இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும், பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும்.
செய்யவேண்டிய பரிகாரம்
திருவானைக்காவல் சென்று ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் தரிசித்து வரவும். தினசரி ஸ்ரீவினாயகர் அகவலை பக்தியுடன் துதிக்க இவ்வாண்டு அனைத்தும் நன்மையாக நடக்கும்.












Click it and Unblock the Notifications