குழந்தை பாக்கியம் வேண்டுமா? மாசி மகத்தில் நீராடுங்கள்!
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது.
சென்னை: மாசி மகத்தில் விரதமிருந்து நீராடினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கும்ப ராசியில் சூரியனும் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சந்திரனும் சஞ்சாரம் செய்யும் நாளே மாசி பௌர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது.
மாசி மகம் திருவிழா தமிழகம் முழுவதும் பல ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாசிமகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது. கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் சுவாமிகள் எழுந்தருளுகின்றனர்.
மாசி மகம் மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.
தோஷங்களைப் போக்கும் மாசி மகம் நாளில் தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளை நிலைகளில் தீர்த்தவாரியாடச் செய்வதோடு மக்களும் புனிதநீராடி மகிழ்கின்றனர்.
மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், "மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்" என்பதுதான். மக நட்சத்திரத்தை "பித்ருதேவதா நட்சத்திரம்" என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை "பிதுர் மஹா ஸ்நானம்" என்கிறது சாஸ்திரம்.
புண்ணிய நதிகளில் நீராடல்
சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
நதிகளில் நீராடுவது நன்மை
மாசி மகம் நாளை ‘கடலாடும் நாள்‘ என்றும் ‘தீர்த்தமாடும் நாள்‘ என்றும் சொல்வார்கள். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பர்.
கும்பகோணத்தின் சிறப்பு
கும்பகோணத்தில் மாசி மகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகத்தன்று மக்கள் புனித நீராடுவது வழக்கம். பிற ஸ்தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
இன்று மகாமகத்தை முன்னிட்டு மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
சக்தி தோன்றிய தினம்
மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணுபகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
மந்திர உபதேசம்
மாசி மகம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது. மாசி மகத்தில் விரதமிருந்து நீராடினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் மாணவர்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை வணங்கி பாடங்களை படித்தால் அறிவு விருத்தியாகும். மந்திர உபதேசம் பெறுவதும் மிகவும் சிறப்பாகும். கல்வி தொடர்பான செயல்களை தொடங்க வேண்டும் என்றால் மாசி மகத்தில் தொடங்குவது நன்று.
குழந்தை பாக்கியம் தரும் யாகம்
மாசிமகம் பௌர்ணமியை முன்னிட்டு வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், சந்தானகோபால யாகமும் நடைபெறுகிறது. திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் நடைபெறும் சிறப்பு வாய்ந்த ஹோமங்களில் கலந்துகொண்டு தன்வந்திரி பகவான் அருளும் பெறலாம்.