New Year Rasi Palan 2019 : மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம் வரும்

2018 ஆம் ஆண்டு முடியப்போகிறது, 2019 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைக் தரும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரகங்களின் நகர்வு, சுப கிரகங்களின் பெயர்ச்சிகளை வைத்து ராசி பலன்களைச் சொல்லலாம். வரப்போகும் 2019ஆம் புத்தாண்டில் தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு வேகமாக நகர்ந்து சில மாதங்கள் தனுசு ராசியில் அமர்வார் மீண்டும் பின்னோக்கி சென்று தற்போது உள்ள விருச்சிகத்தில் அமர்வார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது.

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான். தசா புத்தி அடிப்படையில் சிலருக்கு பலன்கள் மாறுபடலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இந்த ஆங்கில புத்தாண்டு எப்படி என பார்க்கலாம். விரிவாக ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனியாக பலன்களை படிப்பதற்கு முன்பு ட்ரைலராக இந்த பலன்களைப் படியுங்கள்.

மேஷம்

மேஷம்

விடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே. இந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். மார்ச் மாதம் முதல் அவர் அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.10.4.19 முதல் 8.8.19 வரை வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும்.

அக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்ய பல வழிகள் இருந்தாலும் அதை சுப விரைய செலவாக மாற்றி விடுங்கள்.

ராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், இந்த இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்தியம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

கலை உணர்ச்சியும் காதல் உணர்வும் அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரப்போகிறது. ஆண்டின் துவக்கத்தில் குரு பகவான் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழும். அதிசாரத்திலும் வக்ரகதியாகவும் செல்லும் குருபகவானால் பொருளாதார நிலை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும். பணம் வருவது போல வந்தாலும் கூடவே செலவுகளை இழுத்துக்கொண்டு வரும்.

அஷ்டமத்து சனியின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்றாலும் பிற கிரகங்களின் சேர்க்கையினால் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சியாகி 2ம் இடத்தில் ராகுவும்,8ம் இடத்திற்கு கேதுவும் அமர்கின்றனர். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் வரலாம். அன்னிய இனத்தவர்களால் அனுகூலம் ஆதாயம் உண்டு.எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டிர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.

மிதுனம்

மிதுனம்

புத்திசாலித்தனதை இடத்திற்கு ஏற்ப உபயோகிக்கும் மிதுன ராசிக்காரர்களே... இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார். அவரின் அதிசார சஞ்சாரத்தினால் செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவி, கணவன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அக்டோபர் மாதம் நிகழ உள்ள குரு பெயர்ச்சியினால் திடீர் பயணங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும்.

சனிபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்துள்ள நிலையில் ராகு ஜென்ம ராசியிலும் கேது ஏழாம் வீட்டில் அமர்கிறார். ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடத்திற்கு வருவதால் ஸ்தான பலத்தை சீர்குலைப்பார்.அனைவரும் வணங்க தக்க வாழ்க்கையை கொடுத்தாலும் சிலரை கண்டாலே வெறுப்பாக இருக்கும்.நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். இந்த ஆண்டு உங்களுக்கு ஆதாயம் தரும் ஆண்டாக அமையப்போகிறது.

கடகம்

கடகம்

கற்பனை உணர்ச்சி அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு சாதகமாகவே உள்ளது. குருபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் திருப்பங்களும் வசதி வாய்ப்புகளும் பெருகும். குருபகவான் அதிசார வக்ர சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. தடைபட்ட காரியங்கள் முடிவடையும். வீட்டில் திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும்.

சனிபகவான் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. ஆறில் சனி அமர்ந்திருக்க எதிரிகள் தொல்லை ஒழியும். ராகு 12 ம் இடத்திற்கு மாறுவதால் வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார்.வர்த்தக தொடர்பு ஏற்படும்.சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது 6ம் வீட்டிற்க்கு வருவதால் புது வேலை வாய்ப்பு அமையும். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம்.வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். வைத்தியநாத ஸ்வாமியை வணங்கலாம்.

சிம்மம்

சிம்மம்

வீரமும் வெற்றியை இலக்காகக் கொண்டு செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே... 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப் போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. கிரக பெயர்ச்சிகளும் நன்மை தரக்கூடியதாக உள்ளது. குருவின் பயணம் குதூகலத்தை ஏற்படுத்தும் சிலரது மகனுக்கு வேலை கிடைத்து வெளிநாடு செல்லும் யோகத்தை தரும். திருமணம் நடைபெறும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பதவி பொறுப்புகள் தேடி வரும்.

சனியின் சஞ்சாரம் ஐந்தாம் வீட்டில் இருக்கிறது. அந்த இடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார் கேது. இது நன்மை தரும் அமைப்பாகும்.

லாப ஸ்தானத்தில் வந்து அமரும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள்.அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும்.

மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். புத்திர பாக்கியம் தெய்வஅருள் புண்ணியம் காதல் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். வாங்கிய கடனுக்கு அசலுக்கு அதிகமாக கடனை செலுத்தியவர்களுக்கு கடன் சுமை குறையும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தை காக்கும்.

கன்னி

கன்னி

அறிவாற்றலும் அதை செயல்படுத்தும் திறமையும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குருவின் சஞ்சாரம் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் அமைந்துள்ளது. 2018ல் தடைபட்ட காரியங்கள் தடங்கள் எதுவும் இன்றி நடைபெறும். வரவே வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும், புது வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி யோகத்தை செய்யும்.10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலாளி முதலாளி ஆகலாம். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம் நல்ல சம்பளம் வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். கேது நான்காம் வீட்டில் அமர்கிறார் சூரியனை கண்டு பனி விலகுவதை போல ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். கணேசனை சதுர்த்தி நாட்களில் சென்று அருகம்புல் சாற்றி வழிபடலாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே. 2019 ஆம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரம் பண வருமானத்தை கொடுத்தாலும் சிலருக்கு மருத்துவ செலவுகளைத் தரும். சிக்கனமாக செலவு செய்யவும். யாருக்கு உதவி செய்யும் முன்பு யோசித்து செய்யவும். குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சனிபகவான் சஞ்சாரம் மூன்றாம் வீட்டில் இருக்கிறது. கூடவே குருவும் இந்த ஆண்டு அமரப்போகிறார். கேதுவும் அமர்கிறார். நடக்கும் தசைகள் யோகமாக இருந்தால் தலைக்கு வந்தது தலை பாகையோடு போய்விட்டது என்று ஆறுதல் படுத்திக்கொள்ளலாம்.

ராகு கேது பெயர்ச்சியினால் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும் கூடவே வசதி வாய்ப்புகளும் வரும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் யோகத்தை தரும். முருகப்பெருமானை சஷ்டி நாளில் வழிபட சங்கடங்கள் தீரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வெற்றியை இலக்காகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.... இந்த ஆண்டு உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. பாத சனி நடந்தாலும் ஜென்ம குரு சாதகமான பலன்களையே தந்து கொண்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். விருந்தினர்களின் வருகையினால் வீடு களைகட்டும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். ரகசிய வழியில் நன்மையைத் தரும். ராகு 8ஆம் வீட்டில் மறைகிறார். ராகு சூது கிரகம் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். வருமானம் சேமிப்பு உயரும்.சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். செயல்களில் வெற்றி கிடைக்க திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள்.

தனுசு

தனுசு

குருவை ராசி நாதனாகக் கொண்ட நேர்மையான எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த ஆண்டு உங்களுக்கு ஜென்ம சனியின் தாக்கம் இருந்தாலும் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாகவே உள்ளது. விரைய குரு சுப விரையங்களை ஏற்படுத்துவார்.

உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. புதிதாக அறிமுகம் ஆனவர்களை நம்பி எந்த செயலையும் செய்ய வேண்டாம். திருமண சுப காரியங்கள் நடைபெறும். புதிய வீடுகளை வாங்க கடன் உதவி கிடைக்கும்.

ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் அமரப்போகிறார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும். இது நாள் வரை கூட்டு தொழில் செய்தவர்கள் பிரிந்து புதிய தொழில் தொடங்கலாம். மோட்ச கேதுவுக்கு ஞானகாரகன் குரு சேர்க்கை கிடைப்பதால் கஷ்ட நஷ்டங்களிலிருந்து விடிவு விமோசனம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

சனியை ஆட்சிநாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே... பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை புரிந்து கொண்டவர்கள் நீங்கள். 2019 ஆம் புத்தாண்டு வருமானத்தை அள்ளித்தரும் ஆண்டாக அமையப்போகிறது. குருவின் சஞ்சாரத்தினால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் கட்டுப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரும். மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைக்கும் நேரம் வந்து விட்டது. திறமைக்கு ஏற்ப வேலையும் ஊதியமும் கிடைக்கும்.

விரைய சனியின் பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பிற கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் சாதகமான பலன்களையே தரப்போகிறது. 6ஆம் பாவத்தில் ராகுவும் 12 ஆம் பாவத்தில் கேதுவும் அமரப்போகின்றனர். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும்.போட்டி பொறாமை பொடி பொடியாகும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு வேலைகள் அமையும். செல்வாக்கு சொத்து சுகத்தை கொடுக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை எள் விளக்கு போட்டு தரிசனம் செய்யலாம்.

கும்பம்

கும்பம்

எதையும் குணமாக சொல்லும் கும்ப ராசிக்காரர்களே. உங்களுக்கு 2019 ஆண்டு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குரு பத்தாம் வீட்டில் இருக்கிறார் ஏப்ரல் மாதம் அதிசாரமாக தனுசு ராசியில் அமர்கிறார். அதன் பின்னர் மீண்டும் விருச்சிகத்திற்கு செல்லும் குரு பகவான் அக்டோபர் மாதம் பெயர்ச்சி அடைந்து தனுசு ராசியில் அமர்கிறார். லாப வீட்டில் அமரும் குருவினால் மேலும் லாபங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே உங்கள் ராசிநாதன் சனி லாபங்களையும் நன்மைகளையும் தந்து கொண்டிருக்கிறார். கூடவே குருவும் இணைகிறார்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் சஞ்சரிப்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். அழகும் வசீகரமும் அதிகரிக்கும். சேமிப்பு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ராகு 5ஆம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகளால் வீண் அலைச்சலும் மன உளைச்சல் ஏற்படும். அம்மாவின் உடல்நிலை சரியாகும். ராகு காலத்தில் துர்க்கா பூஜை செய்யலாம். விரைய ஸ்தானத்தில் இருந்த கேது லாப வீட்டுக்குள் வருவதால், தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள்கள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இது வரை தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்

மீனம்

குருவை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே... 2019ஆம் ஆண்டு உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. குருவின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை தரக்கூடிய ஆண்டாக உள்ளது. ராசி நாதன் குருவின் சஞ்சாரம் ஒன்பதால் வீட்டில் இருப்பதால் யோகங்கள் கூடி வரும். குருவின் அதிசார வக்ர சஞ்சாரத்தினால் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகள் கூட தேடி வரும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை.

ராகு நான்காம் இடத்திலும் கேது பத்தாம் வீட்டிலும் அமர்கின்றனர். நான்காம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். 2019 ஆம் ஆண்டு அதி அற்புதமான ஆண்டாகும். இது பொதுவான பலன்கள்தான். தசா புத்தி அடிப்படையில் சிலருக்கு பலன்கள் மாறுபடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+