Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி 5வது சனி : தம்பதியர் ஒற்றுமை காக்கும் ஒப்பிலியப்பன் ஆலயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் ஊரில் மனைவி சமைத்த உணவில் சிறிதளவு உப்பு கூடினாலோ, உப்பு குறைந்தாலே திட்டுவது கணவரின் வழக்கம். ஆனால் மனைவிக்கு சமையலில் உப்பு போடத் தெரியாது என்பதற்காக வருடம் முழுவதும் உப்பில்லாத உணவை சாப்பிடுகிறார் பெருமாள். மனைவிக்காக உப்பையே துறந்த ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதியைப் பற்றி புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்றைய ஆலய தரிசனத்தில் பார்க்கப் போகிறோம்.

சோழ நாட்டு திருப்பதிகளில் ஒப்பிலியப்பன் ஆலயம் முக்கியமான தலமாகும். 108 திவ்ய தேசங்களில் இது 13வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசம் வைகுந்தம் 'தென்திருப்பதி' என அழைக்கப்படும் சிறப்புப்பெற்றது. இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார். அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம்.

முன்பு வைகுண்டத்திலிருந்த திருமால், அடியார்கட்கு அருள்புரியும் பொருட்டு திருவேங்கடம் திருப்பாற்கடல், அழகிய புஷ்பங்களில் வண்டுகள் கிளரக்கூடிய திருக்கடிகை, திருவிண்ணகர் ஆகிய திவ்ய தேசங்களில் இளமை குன்றாது திகழ்கின்றான் என்று பேயாழ்வாரால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட இந்த திருவிண்ணகர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளா.

ஒப்பிலியப்பன்

ஒப்பிலியப்பன்

1௦8 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாளுக்கு உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கு திருமணங்கள் நிறைய நடக்கின்றன.

ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) , ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒப்பில்லாத அழகு

ஒப்பில்லாத அழகு

திருவிண்ணகர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்ய தேசத்தில் பெருமாள் ஒப்பற்றவனாய் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி ஸ்ரீநிவாசனாய், பூமி தேவி நாச்சியார் வலப்பக்கம் மண்டியிட்டு வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் வணங்கும் திருக்கல்யாணக் கோலத்துடனும், இடப்பக்கம் மார்க்கண்டேய முனிவர் மண்டியிட்டு கன்னிகாதானம் செய்து தரும் கோலத்திலும் காட்சி தருகின்றனர்.

தல புராணம்

தல புராணம்

மார்க்கண்டேயர் என்ற முனிவர் காட்டில் கண்டெடுத்து வளர்த்த பூமி தேவி அப்போது பருவ வயதை எட்டவில்லை. அவளுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று கனவு காண்கிறார், அவளைப் பெறாமல் பெற்ற தந்தையான மார்க்கண்டேயர். ஒருநாள் முதுமை சுமந்த பெரியவர் ஒருவர் நடுங்கியபடியே மார்க்கண்டேயரைத் தேடி வருகிறார். அவரது மகளைத் தனக்கு மணம் முடித்து வைக்குமாறு கூறுகிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்தார் மார்க்கண்டேயர். என் மகளுக்கு சமையலில் சரியாக உப்பு கூட போடத் தெரியாதே... அவளை நீங்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? உணவில் உப்பு போடத் தெரியவில்லை என்று கூறி அவளை நீங்கள் அடிக்க வேண்டியது வரும். அதனால், உங்களுக்கு என் மகளைத் திருமணம் செய்து தர முடியாது என்று கூறி மறுத்து விட்டார்.

பெருமாளுக்கு திருமணம்

பெருமாளுக்கு திருமணம்

அதை அந்த முதியவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு அந்த சிறுமிதான் மனைவியாக வரவேண்டும் என்று அடம் பிடிக்காத குறையாகக் கேட்டார்.

இதையடுத்து, ‘இது என்ன சோதனை பெருமாளே...' என்று கண் மூடி கலங்கினார் முனிவர். அப்போது அவர் முன்பு நின்றிருந்த வயதானவர் மறைந்து, அவருக்குப் பதிலாக சர்வ அலங்கார திருக்கோலத்தில் திருமால் நின்றிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார் மார்க்கண்டேயர்.

உப்பில்லாத உணவு

உப்பில்லாத உணவு

அப்போது பகவான், முனிவரே! உமது மகளாக வளரும் பூமிதேவியை யாமே மணம் புரிந்து கொள்வோம். இப்போது அவள் சிறுமியாக இருப்பதால், அவளால் உணவில் உப்பு கூட சரியாகப் போடத் தெரியாது என்று நீரே கூறினீர். அதனால், அவளது கையால், உப்பு இல்லாமல் சமைத்த உணவே எனக்கு மிகுந்த சுவை உடையதாக இருக்கும். இன்று முதலே உணவில் நான் உப்பை விலக்கிக் கொள்கிறேன். உப்பு இல்லாமல் நான் உண்ட உணவை, பின்னர் உண்பவர்கள் ஆயிரம் சாந்திராயண விரதங்களின் பலனைப் பெறுவார்கள்... என்று அருளினார். இந்தக் காரணத்தாலேயே உப்பிலியப்பன் கோவிலில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தயார் செய்யும் எந்தப் பிரசாதத்திலும் உப்பு சேர்ப்பதில்லை என்கின்றனர்.

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள்

பெருமாள் வாக்குக்கிணங்க இன்றும் இந்த சன்னதி பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்பதால் "லவண வர்ஜித வேங்கடேசன்" (லவணத்தினை - உப்பினை விலக்கிய) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் - உப்பிலியப்பன் என்று அழைக்கிறோம். 108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் கொடுக்கப்படுகிறது.

ஏழுமலையானுக்கு அண்ணன்

ஏழுமலையானுக்கு அண்ணன்

திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம். மருகண்டு மஹரிஷியின் பத்னி விருப்பப்படி உப்பில்லாத ப்ரஸாம்நிவேதனம் - எனவே இக்கோவில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. அதனால் பெருமாள் "உப்பிலியப்பன்" என்றும் அழைக்கப்படுகின்றனர்.

வேண்டுதல்

வேண்டுதல்

இத்தலத்தில் திருக்கல்யாணம், திருமஞ்சனம், பிராத்தனை, கருட சேவை, தங்கரத உலா போன்றவைகளை நிகழ்த்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
இப்பெருமான் திருவீதிப் புறப்பாட்டின் போது தனியாக செல்வது இல்லை. தாயாருடன் சேர்ந்து செல்வார். தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. ஒவ்வொரு மாதமும் சிரவணத்தன்று சிரவண தீபம் எடுத்து வலம் வரும் பொழுது பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்படுகிறது.

துளசியால் அர்ச்சனை

துளசியால் அர்ச்சனை

இங்கு எம்பெருமானை துளசியால் அர்ச்சனை செய்பவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நடை பயணமாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் எட்டுக்கும் புண்ணியம் பெறுவர் என்பது ஐதீகம். இந்தக் கோயிலுக்கு பசுவின் குளம்படி அளவுள்ள நிலத்தை தானம் கொடுத்தாலே மோட்சம் பெறுவர் என்கிறது தல புராணம்.

அழகிய ஓவியங்கள்

அழகிய ஓவியங்கள்

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம்.

புஷ்கரணி

புஷ்கரணி

அஹோராத்ரி புஷ்கரணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால், இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. அதற்கும் ஒரு புராண கதை உள்ளது.

சக்தி வாய்ந்த திருக்குளம்

சக்தி வாய்ந்த திருக்குளம்

தேவசர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்துகொள்ள முயன்றபோது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார். அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை

இங்கே பெருமாளை வணங்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி கொண்டு சென்றால் அது மிகப்பெரிய பாவம் அவர்கள், நரகத்திற்கு செல்வார்கள் என்று தல புராணம் கூறுகிறது. இக்கோவிலுக்கு வந்து பெருமாளையும் பூமாதேவியையும் வணங்கினால், அவர்களது குடும்பத்தில் கணவன் மனைவியர் இருவருக்கிடையில், சகிப்புத்தன்மை பெருகி இருவரிடையேயும் அன்னியோன்யம் அதிகரித்து மணவாழ்வில் இன்பம் கிட்டுமாம்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சுவாமி : அருள்மிகு வேங்கடாஜலபதி (ஒப்பிலியப்பன்).

அம்பாள் : அருள்மிகு பூமாதேவி.

மூர்த்தி : மணியப்பன், என்னப்பன், மார்கண்டேயன், இராமர், சீதை, லெட்சுமணன், அனுமார்.

தலவிருட்சம் : துளசி.

வழிபட்டோர் : மார்க்கண்டேயர், கருடன், காவிரி.

பாடியோர் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார்.

கும்பகோணம் சென்று அங்கிருந்து ஒப்பிலியப்பன் கோவிலுக்கு செல்லலாம். திருநாகேஸ்வரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது ஒப்பிலியப்பன் கோவில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+