ராகு கேதுவால் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷமா? கலங்க வேண்டாம்... ஈஸி பரிகாரம் இருக்கு
சர்ப்ப தோஷம் எனப்படும் நாக தோஷத்தினால் சிலருக்கு திருமண தடையும், குழந்தைபேறுக்கு தடையும் ஏற்படுகிறது. இதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மதுரை: ஒருவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால் சிலருக்கு திருமணத்தடை, புத்திரப்பாக்கியத்தடை ஏற்படும். நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. மேஷ ராசியில் ராகு இருக்க துலாம் ராசியில் கேது இருப்பதால் கடந்த மாதம் வரை கிரகங்கள் ராகு கேதுவின் பிடியில் சிக்கியிருந்தன. சர்ப்ப தோஷம் என்றால் என்ன எந்தெந்த சர்ப்ப தோஷத்திற்கு என்ன பாதிப்பு வரும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஆன்மிக ரீதியாக ராகுவை பாம்பு உடலும் மனித தலையும் கொண்டவராகவும், கேதுவை பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவராகவும் சித்தரிக்கிறார்கள். நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் பற்றி இன்றைக்கு பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.
ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தால் திருமணம் தாமதமாகலாம். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் ராகு-கேது அமர்ந்திருந்தால் எவ்வித தோஷமுமில்லை. இந்த நான்கு மூலைகள் தவிர மற்ற இடங்கள் ஏழாம் இடமாக அமைந்து அங்கே ராகுவோ கேதுவோ அமர்ந்திருக்கும் அமைப்பை உடையவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
திருமணத்தடை ஏற்பட காரணம்
ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் ராகு கேதுவுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களின் இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை ஏற்படும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும்.
மன அழுத்தம் தரும் தோஷம்
இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் பொருளாதரப் பின்னடைவு ஏற்படும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு. ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேது இருந்தால் சங்கல்ப கால சர்ப்ப தோஷம் ஏற்படும். இவர்களுக்கு வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும்.
குழந்தை பாக்கியத்தடை
புத்திர ஸ்தானம் என்று கருதப்படும் ஐந்தாம் இடத்தில் கேது தனித்து அமர்ந்திருந்தால் புத்ரதோஷம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதனாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகலாமே தவிர தடைபடாது. இந்த அமைப்பைப் பெற்றவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதேபோல கடனைக் குறிக்கும் ஆறாம் இடத்தில் கேது அமர்ந்திருந்தால் கடன், பிரச்னைகள் முற்றிலுமாகக் குறையும் என்றே பலன் கொள்ள வேண்டும்.
திருமண தடை
ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ராகுவும் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது. எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. தந்தை வழி சொத்தினை அடைய ஆசைப்பட்டால் தவறாகி விடும்.
கால சர்ப்ப தோஷம்
பிறந்த ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சங்ககுட கால சர்ப்பதோஷம் ஏற்படும். இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு. 10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
கல்வி யோகம்
ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும். பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கு எதிரிகளும் அதிகமிருப்பார்கள்.
ராகு அள்ளி கொடுப்பார்
ராகு தான் இருக்கும் இடத்தின் வலிமையைக் கூட்டி வேகமாகச் செயல்பட வைப்பார். உதாரணமாக தன ஸ்தானத்திலோ அல்லது லாப ஸ்தானத்திலோ ராகு அமர்ந்திருந்தால் தனமும், லாபமும் பெருகும் அதே போல புத்ர ஸ்தானத்தில் அமர்ந்தால் நிறைய பிள்ளைகளைத் தருவார். இதற்கு நேர்மாறான பலனைக் கேது தருவார். அதாவது, தான் அமர்ந்திருக்கும் இடத்தின் வலிமையை முற்றிலுமாகக் குறைத்துவிடுவார்.
திருமணத்தடை நீங்க பரிகாரம்
ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர நன்மைகள் நடைபெறும். கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம். கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடனை தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.