ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ஜென்ம கேது.. களத்திர ராகு.. கன்னி ராசிக்காரர்களே.. பரிகாரம் இதோ
சென்னை: ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் கேதுவும் ஏழாம் வீட்டில் ராகுவும் பயணம் செய்யப்போகின்றனர். புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ஜென்ம கேது என்ன செய்யப்போகிறார்? களத்திர கேதுவினால் பாதிப்பு எதுவும் வருமா? அதற்கு பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். மீன ராசியில் அமரப்போகும் ராகு குரு பகவானைப் போலவும் கன்னி ராசியில் பயணம் செய்யும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகின்றனர். புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. தொழில், வியாபாரம் வருமானம், உறவுகள் என அனைத்தையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி இனி மன நிம்மதியை தரப்போகிறது.

கன்னி ராசி: கடந்த காலங்களில் உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் வந்து கொண்டு இருந்தது. சண்டை சச்சரவுகள் இருந்தது. நண்பர்கள் உறவினர்கள் கூட உங்களுக்கு எதிராக இருந்தனர். இதன் மூலம் உங்களுக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. கடனில் சிக்கித்தவிக்கும் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீருவதால் உங்கள் கவலைகளும் முடிவுக்கு வரப்போகிறது. ஜென்ம ராசியில் அமரும் கேதுவும் களத்திர ஸ்தானத்தில் அமரும் ராகுவும் உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்யப்போகின்றனர்.
கவனம் தேவை: அண்ணன் தம்பியா இருந்தாலும் பணம் விசயத்தில் கவனம் தேவை. நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் படிவங்களில் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். கொடுத்த பணம் திரும்ப வராமல் போய்விடும். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். பணம் விசயங்களில் கவனம் தேவை.
சுப காரியம் நடைபெறும்: இது நாள் வரை சுப காரியங்கள் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகப்போகிறது. விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியவர்கள் இனி மனம் திருந்தி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் தேடி வரும். ராகு ஏழாம் வீட்டில் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் அஷ்டம குருவிடம் இருந்து விலகப்போகிறார். உங்களுக்கு நல்ல யோகம்தான். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் அமரப்பேகும் குரு பகவானாலும் ராகு கேது பெயர்ச்சியினாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு உங்களுடைய வாழ்க்கையில் திருப்புமுனைகள் ஏற்படும். இனி வெற்றிகளை மட்டுமே ருசிக்கப் போகிறீர்கள்.
சொத்துக்கள் கிடைக்கும்: பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு வேலை, அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேர் புகழ் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எதிர்பார்க்காத பண வரவு வரும். கடன் சுமைகள் நீங்கும். நீங்க கொடுத்து நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பிள்ளைகள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள்.

ஜென்ம கேது: கேது பகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது உங்களுடைய ராசி நாதன் போல செயல்படப்போகிறார். உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது. ராசியில் கேது அமர்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும்.
ஆரோக்கியத்தில் கவனம்: உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் சில நேரங்களில் வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அடிக்கடி நிகழும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நன்மைகளைத் தரப்போகிறது. மகிழ்ச்சியும் மனநிம்மதியும் தேடி வரப்போகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும் மனக்குழப்பங்கள் தீரும். திருச்செந்தூர் சென்று செவ்வரளி மாலை சாற்றி முருகப்பெருமானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications