ராகுல்காந்திக்கு பிரதமர் நாற்காலி கிடைக்குமா? நாடாளும் யோகம் வந்து விட்டதா? - ஜாதகம் சொல்வதென்ன?
நரேந்திரமோடியின் போட்டியாளரும் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூட்டணி கட்சியினரால் எதிர்பார்க்கப்படும் ராகுல்காந்தியின் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன, அவருக்கு நாடாளும் யோகம் வந்து விட்டதா
சென்னை: இது தேர்தல் காலம்... மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடியான போட்டி. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது. ஸ்டாலின் தவிர கூட்டணி கட்சியினர் யாருமே ராகுல்காந்தியை முன்மொழியவில்லை. ராகுல்காந்திக்கு நாடாளும் யோகம் வந்து விட்டதா? அவரது ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி நியமனம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளை சந்தித்திருந்தாலும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களின் மூன்று மாநிலங்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.
இந்த தெம்போடு தமிழகம் வந்த நேரத்தில்தான் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று கூறினார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் வட இந்தியாவில் இருந்து ராகுல்காந்திக்கு ஆதரவாக எந்த குரலும் ஒலிக்கவில்லை. நேற்று நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். இதனை நான் உறுதியாக சொல்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
ராகு கேது பெயர்ச்சி 2019: உங்க ஜாதகத்தில் ராகு இங்க இருந்தா நீங்க திடீர் கோடீஸ்வரர்தான்!
பிரதமர் ஆகும் யோகம்
'ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். நாடாள வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கான யோகம், ஜாதகத்தில் அம்சங்கள் கிரகங்களின், சேர்க்கை, பார்வை இருக்க வேண்டும். ராஜ கிரகங்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான் சாதகமான நேரத்தில் ராஜ பதவி தேடி வரும்.
நவகிரகங்களின் சஞ்சாரம்
அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திரம்,திரிகோண பலம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அடுத்த நிலை பெறும் அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக்கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக்கூடிய கேது பகவானின் நிலைகளையும் கவனிக்க வேண்டும்.
சூரியனின் நிலை
ஒருவர் அதிகாரம் செலுத்தக்கூடிய அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற உயர் பதவியைப் பெற வேண்டுமாயின், அவரது ஜாதகத்தில் ராஜ ராசியான சிம்மமும், அதன் அதிபதியான சூரியனும் மிக அதிகமான சுபத்துவம் அடைவதோடு, பதவி ஸ்தானம் எனப்படும் பத்தாமிடமும் வலுப்பெற்றிருக்க வேண்டும். ராகுல்காந்திக்கு பத்தாமிடத்தில் லக்னாதிபதி சுக்கிரன் வலுப்பெற்று அமைந்துள்ளார். சூரியன், செவ்வாயோடு இணைந்துள்ளார். சிம்மத்தில் கேது அமர்ந்துள்ளார்.
ராகுல்காந்தி துலாம் லக்னம்
ராகுல்காந்தியின் ராசி, நட்சத்திரத்தில் பல குழப்பங்கள் இருந்தாலும் அவரது பிறந்த நேரம், நாள், ஊரை வைத்து கணித்ததில் ராகுல் காந்தி ஜாதகத்தில் துலாம் லக்னம், தனுசு ராசி மூலம் நட்சத்திரம் என வந்துள்ளது. லக்னாதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் கடக ராசியில் அமர்ந்திருக்கிறார். ராஜ கிரகமான சூரியன் மிதுனத்தில் செவ்வாய் உடன் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் அஷ்தங்கம் அடைந்துள்ளார். ராசி அதிபதி வியாழன் வக்கிர நிலையில் லக்னத்தில் அமர்ந்துள்ளார். சனி மேஷ ராசியில் நீசம் அடைந்துள்ளார். சிம்ம ராசியில் கேதுவும், கும்ப ராசியில் ராகுவும் அமர்ந்திருக்கின்றனர்.
நீசபங்க ராஜயோகம்
ராகுல் காந்திக்கு நீசபங்க ராஜயோகம் அமைந்துள்ளது. ஜாதகத்தில் சனி பகவான் நீசமடைந்திருக்கிறார் என்றாலும் நீச ராசியின் அதிபதி செவ்வாய் சந்திர கேந்திரத்தில் நிற்கிறார். நீச ராசியில் உச்சம் அடைகின்ற சூரியன் சந்திர கேந்திரத்தில் நிற்பதால் அவருக்கு நீசபங்க ராஜயோகம் அமைந்துள்ளது. இது முழுமையான ராஜயோகத்தை தராவிட்டாலும் நீசபங்க ராஜ யோகம் அமையப்பெற்றவர்கள் நடுத்தர வயதிற்கு மேல் மிகவும் புகழடைவார். உயர்பதவியை அடைவார்கள்.
சுப கிரகங்கள்
ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும். அது சுபகர்த்தாரி யோகம் எனப்படும்,ராகுல்காந்தியின் ஜாதகத்தில் சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கிரகங்களான புதனும் சுக்கிரனும் அமர்ந்திருக்கின்றனர். சுபகார்த்தாரி யோகம் அமைந்துள்ளது.
சூரியனுக்கு 12ல் புதன்
ஜாதகத்தில் சூரியனுக்கு 12ல் சந்திரன், ராகு, கேதுவைத்தவிர மற்ற ஐவர் புதன், குரு, சுக்கிரன், சனி இவர்களில் ஒருவர் இருந்தால் வசியோகத்தில் பிறந்தவர்கள் . வசி யோகத்தில் பிறந்த ஜாதகர் அல்லது ஜாதகி உலகப் புகழ் பெற்றவர்கள் எல்லா மக்களாலும் விரும்பப் படுவர்கள். நல்ல குணமும், இனிமையான வார்த்தைகள், தருமம் செய்வதில் அதிக ஆர்வம், அமைச்சர்கள், அரசாங்க உயர் பதவி, உர்ந்த அந்தஸ்தை அடைந்து சிறப்புடன் வாழ்வர்கள். ராகுல்காந்தி ஜாதகத்தில் சூரியனுக்கு 12ல் புதன் அமர்ந்திருக்க வசி யோகம் கூடி வந்துள்ளது.
சூரியனுக்கு 2ல் சுக்கிரன்
ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டில் சந்திரன், ராகு, கேதுகள் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் வெசி யோகம் அமையும்.
வெசி யோகம் அமையப்பெற்றவர் அழகானவர், இனிமையாக பேசுவார்கள்,தைரியசாலிகளாகவும் இருப்பார். தந்தையர் புகழ் பெற்றிருப்பர். ராகுல்காந்தி ஜாதகத்தில் சூரியனுக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார்.
ராகுல்காந்தி சுக்கிரதிசை
ராகுல்காந்திக்கு 6 வயது முதல் 26 வயதுவரை, அவரது லக்னத்தின் ராஜயோகாதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு நடந்தது. அதன்பிறகு சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள்தான் நடந்தன. ஏப்ரல் மாதம் வரை செவ்வாய் தசை நீடிக்கும். 2019 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ராகுலுக்கு ராகுதசை ஆரம்பமாகும். இதுநாள்வரை சரியில்லாத தசாபுத்திகள் நடந்த காரணத்தினால்தான் ராகுல்காந்தியால் பிரதமர் பதவியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
கிரகங்களின் சஞ்சாரம் சாதகம்
சனிபகவான் ராகுல்காந்திக்கு யோககாரகன் என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள். அவருக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ராகுதிசை ராகுபுத்தி ஆரம்பிக்கப் போகிறது. இது லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தற்போது நடந்துள்ள ராகு பெயர்ச்சியும், 2020வரை சனிப்பெயர்ச்சியும் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள ராகுல்காந்திக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர். கடந்த தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்காமல் ஓரளவிற்கு சீட்டுகளை பெறும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள்.
பிரதமர் நாற்காலியில் அமர முடியுமா?
ராகுல்காந்தி ஜாதகத்தில் ராகு ராஜயோகத்தை தரக்கூடிய இடம் என்று மூலநூல்கள் குறிப்பிடும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ராகு இல்லாமல் கும்பத்தில்தான் இருக்கிறார். அதைவிட மேலாக தற்போது ராகுலின் ராசியான தனுசுவிற்கு கோட்சார ரீதியில் ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் வேத ஜோதிட விதிகளின்படி நடப்பு கோட்சாரம் மற்றும் தசாபுக்தி அமைப்புகள் சாதகமாக இல்லாததால் இம்முறை அதி உச்ச பதவியை அடைவதற்கு ராகுலுக்கு தடை இருக்கும் என்பதே ஜோதிடர்களின் கணிப்பு.